>> Tuesday, August 31, 2010


சௌதி தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்


கொழும்பின் சௌதியரேபியத் தூதரகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
தூதரகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய பெண்கள் பங்குகொண்டிருந்தனர்
சௌதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்ரவதைப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சௌதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

சௌதி அரேபியாவுக்கு செல்லுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சௌதி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சௌதி தூதரகம் முன்பு பெருந்திரளாகக் கூடி நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு பலவித வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆரியவதிக்கு நடந்தது போன்ற கொடுமை வேறு எவருக்கும் நடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சௌதி அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவது இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சௌதி தூதரகம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்று திரும்பியிருந்தவர்கள் என்று பல தரப்பினராக சுமார் 400 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மத்தியகிழக்கிற்கு வேலைக்கு செல்வோருக்கு அரசாங்கம் வழங்கிவருகின்ற உதவி ஒத்ததாசைகள் போதாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய ததேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச கடப்பாடுகளை சௌதியரேபிய அரசாங்கம் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தாத வரையில் இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் அந்நாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சௌதி தூதரகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ரியாத்தில் ஆரியவதி வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைசெய்த இடத்தில் தனக்ககு வேலைப்பளு அதிகமாக இருந்தது என்று அவர் புகார் கூறியதை அடுத்து அவ்வீட்டின் எஜமானியும் எஜமானருமாகச் சேர்ந்து அவரது உடலில் 24 இடங்களில் ஆணிகளையும் ஊசிகளையும் காய்ச்சி ஏற்றி சித்ரவதை செய்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை திரும்பிய ஆரியவதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் பெரும்பான்மையான ஆணிகள் அகற்றப்பட்டு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter