>> Monday, December 12, 2011

தில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்
இந்தியாவில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் போராட்டங்களை நடத்திவரும் முன்னணி ஆர்வலர் அன்னா ஹஸாரே, தில்லியில் ஞாயிறன்று ஒரு-நாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் புதிதாக வரைந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள லோக்பால் சட்ட மசோதா, நாட்டில் ஊழலைக் களைய போதுமானதாக இல்லை என்று கூறி அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை செய்கிறார்.
நான்கு மாதங்கள் முன்பு லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி அன்னா ஹஸாரே நடத்திய உண்ணாவிரதம்தான் தேசிய அளவிலான ஒரு போராட்டமாக உருவெடுத்து, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தம் தந்திருந்தது.
அதேநேரம், உண்ணாவிரதம் போராட்டம் என்ற பேரில் ஜனநாயக வழிமுறைகளை சிதைக்க முனைகிறார் என்று ஹஸாரே மீது குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.

Read more...

தமிழகத்தில் கம்பம் பகுதியில் இன்னும் பதற்றம் ஓய்வதாக இல்லை. இரண்டாவது நாளாக இன்று ஞாயிற்றுக் கிழமையும் ஆயிரக்கணக்கான ம்க்கள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி நோக்கிச் சென்றனர்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு சென்றபோது அவரது காரை மறித்து கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்
ஜெயலலிதா
குமுளி வழியாக கேரளா சென்றுவரும் அனைத்து வாகனப் போக்குவரத்தும் ஒருவாரத்திற்கும் மேலாக தடைப்பட்டுப்போயிருக்கிறது.
பெருங்கூட்டமாகச் சென்று குமுளிக்குள் நுழைய கடந்த இரண்டு நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சனிக்கிழமை குமுளிக்குள் நுழைந்த சிலர், ஒரு வீட்டின் மீது கற்களை வீசியதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஜெயலலிதா கோரிக்கை
இதனிடையே தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், எதிர்வரும் டிசம்பர் 15 அன்று சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். அக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பீதி பரப்பப்படுகிறது என்று சுட்டிக்காட்டியும், அணையில் தேக்கப்படும் நீரில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்ட அவர், மக்கள் நிதானமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
மக்களின் உணர்வுகளைத் தான் பகிர்ந்துகொள்வதாகவும், அதே நேரம் கேரள மக்களுக்கும், நமக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்குதீர்வு ஆகாது எனக்கூறினார்.
நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம் என்று வலியுறுத்திய அவர், மாநிலத்தில் எவருக்கேனும் பாதிப்பு இருந்தால் தனது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமென்றும் உறுதியளித்திருக்கிறார்.
தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்களை காட்டி, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதன் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தான் நம்புவதாகவும் ஜெயலலிதா மேலும் கூறுகிறார்.
மத்திய மற்றும் கேரள மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பாக நாளை திங்கட்கிழமை மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கும் உண்ணா நோன்பு நிகழ்ச்சியினை திமுக தலைவர் மு கருணாநிதி மாலையில் முடித்துவைக்கிறார்.

Read more...

>> Friday, August 19, 2011

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி


காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில், இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்


முன்னதாக, இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாரக் கூறியிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஹமாஸுடன் இணையாது காசாவில் செயற்பட்டுவரும் பீஆர்சி என்ற அமைப்பின் தலைவரும் மேலும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஃபா நகரில் வீடொன்றிலிருந்த இரண்டு பொதுமக்கள் கொல்லபட்டுள்ளதாக பாலஸ்தீன் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, பீர்ஷெபா நகரிலிருந்து கரையோர நகரான ஈலட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது ஆயுததாரிகள் முதலில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீதியோரத்து குண்டொன்றுக்கும் ரொக்கட் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு வாகனங்களும் சிக்கின.

சம்பவ இடத்துக்கு விரைந்த இஸ்ரேலிய படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருந்தது.
குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது
பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

நீண்டகாலத்துக்குப் பின்னர் எகிப்திய எல்லையை அண்டி இஸ்ரேல் மண்ணில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

காசா நிலப்பரப்பிலிருந்து எகிப்தின் சினாய் பாலைவனத்தினூடாக ஆயுததாரிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேலிய படைத்தரப்பு கூறுகின்றது.

காசாவே பயங்கரவாதத்தின் முக்கிய ஊற்றிடமாக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுத் பாரக் இதற்கு விளக்கம் கூறியுள்ளார்.
தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

ஆனால் ஹமாஸ் எம்.பி சலாஹ் அல் பர்தாவீல், காசாவை தொடர்புபடுத்திக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவிட்டார்.

காசாவில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய ஆக்கிரமிப்புக் குடியிருப்பினால் இயல்பாகவே ஏற்படக்கூடிய பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை பார்ப்பதாகவும் ஹமாஸ் எம்.பி கூறினார்.

Read more...

>> Friday, August 5, 2011


பேச்சுவார்த்தை: ததேகூ காலக்கெடு


த தே கூ முத்திரை
த தே கூ முத்திரை
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, கூட்டமைப்பு கடும் விமர்சனத்தையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளது.

வியாழன் இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசு, பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாங்கள் பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழககில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியவை குறித்து பேசிவந்ததாக கூட்டமைப்பு கூறுகிறது.

ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகு இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த பிரேரணைகள் எதற்கும் அரசிடமிருந்து பல மாதங்களாக எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்தச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்கிற “ஏமாற்று வழிமுறையை” தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

சமஷ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதியதிகாரங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் இரண்டு வாரத்தில் தெளிவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.

அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Read more...

>> Tuesday, August 2, 2011


'அரசு பழி வாங்குகிறது'- திமுக கோஷம்


திமுக ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டம்
ஆளும் அதிமுக அரசு தங்களைப் பழிவாங்குவதாகக் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பெருமளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதாக்க் கூறி, இன்றைய அதிமுக அரசு அபகரிப்பு குறித்த புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியின் ம்கன் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் என இதுவரை பலர் கைதாயிருக்கின்றனர்.

மாநில அளவில் 1500 புகார்கள் வந்திருப்பதாக அரசு கூறுகிறது.

ஆனால் தங்களைப் பழிவாங்கவே அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக திமுகவினர் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி, ஜெயலலிதா அரசைக் கண்டித்து மாநில அளவில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

முன்னணித் தலைவர்கள் பலரும் இந்த ஆர்ப்பட்டங்களில் கலந்துகொண்டனர்.

வடசென்னை திமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்ன உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் மாலையில் விடுதலையாயினர்.

Read more...


'கரைவலை உரிமம் பறிபோனது'- முல்லை.மீனவர்


வடக்கில் கரைவலை மீன்பிடித் தொழில்
கரைவலை உரிமங்கள் பறிபோகின்றன- தமிழ் மீனவர்கள்
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் உரிமங்கள் சிங்கள மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதேவேளை அங்கு தமிழர்கள் எவரும் கரைவலைத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கபடவில்லை என்றும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 ‘கரைவலை பாடுகளில்’ ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன்னாள் கல்வியதிகாரி அண்டனி ஜெகநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.

1984 இல் தமிழர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு, அங்கு சிங்கள மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கரைவலை உரிமங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

முன்னர் இருந்த 44 பாடுகள் இன்று 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அண்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.

கொக்கிளாய் பகுதிக்கு உரிம ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்ற தமிழ் மீனவர்கள், அங்கு சிங்கள முதலாளிமார் உரிமங்களை காட்டி தொழில் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

‘உரிமம் உள்ள சிங்களவர்கள் அனுமதிக்கப்பட்டனர்’- அமைச்சர்


அமைச்சர் ராஜித்த சேனாரத்ன

ஆனால், இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சரான ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அந்தப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்து, விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு மாத்திரமே அங்கு மீண்டும் கரைவலைத் தொழில் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அதுதவிர, தென்பகுதியில் இருந்து எவரும் புதிதாக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழர்களின் உரிமங்கள் சிங்களவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை அவ்வாறு தமிழர்கள் எவருக்காவது உரிமம் இருந்து, அவர்கள் அங்கு கரைவலை தொழில் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், தன்னிடம் புகார் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Read more...

>> Monday, August 1, 2011


எடியூரப்பா ராஜினாமா


எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை எடியூரப்பா கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு தன்னுடைய ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

சட்டத்திற்கு புறம்பான சுரங்கத்தொழிலில் எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக லோகயுக்தாவில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, பதவியை விட்டு விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது.

ஆனால் அது தொடர்பில் மேலிடத்துடன் முறுகல் நிலையில் இருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ள எடியூரப்பா தன் மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு சதானந்த கவுடாவை முதலமைச்சராக்கவும் அவர் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

>> Friday, July 29, 2011




'போர்க் குற்றம்'- மீண்டும் சானல் 4 செய்தி


இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் பற்றி பிரிட்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புதிய விவரணச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று விடுமாறு, அங்கு இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்படும் இருவரை மேற்கோள் காட்டி சானல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய மற்றும் ஷவேந்திர மீது குற்றச்சாட்டு


மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா
‘எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள்’ என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் கடமையில் இருந்ததாக கூறும், ஃபெர்ணான்டோ என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவர் சானல் 4வுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாக பெர்ணான்டோவை மேற்கோள்காட்டி சானல் 4 கூறுகிறது.

பாதுகாப்புக் கருதி குறித்த இராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறும் சானல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது.

வௌ்ளைக் கொடிச் சம்பவம்


நிராயுத பாணிகள் சுட்டு்க் கொல்லப்படும் காட்சி- சானல் 4
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் ஃபெர்ணாண்டோ சானல் 4 செய்தியில் கூறுகிறார்.

இதற்கிடையே, ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை அவரது அமெரிக்காவில் அவரது தூதரகத்துக்கு வெளியே சானல் 4 செய்தியாளர் சந்துத்துள்ளார்.

இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த இராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சானல் 4வே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார்.

இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், ‘வெள்ளைக் கொடி’ சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ஃபெர்ணான்டோவின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.

இதற்கிடையே, சானல் 4 வில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் மறுத்தார்.

Read more...

>> Thursday, July 28, 2011



திரைப்பட வரி விலக்கு- புதிய நிபந்தனைகள்


அதிமுக அரசின் புதிய நிபந்தனைகள் அறிமுகம்
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று கடந்த திமுக ஆட்சியின் போது இடப்பட்ட ஆணையில் இன்றைய அ இஅதிமுக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது.

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்க்கலாம் என்பதை சுட்டும் விதமாக அளிக்கப்படும் ‘U’ சான்றிதழ் பெறும் திரைப்படங்களே வரிவிலக்கு பெற தகுதியுடையவை என வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட உத்தரவு ஒன்று கூறுகிறது.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.

சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன.
எனவே, கூடுதல் தகுதி வரையறைகளாக தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும்.

நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்


'U' சான்றிதழ் பெறும் படங்களுக்கே வரிவிலக்கு
திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்றும், கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும், வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் பாலிவால் வெளியுட்டுள்ள உத்தரவு தெரிவிக்கிறது.

திரைப்படப் பெயர்களில் ஆங்கிலத்திலேயே வைக்கிறார்கள், இப்போக்கு நிறுத்தப்படவேண்டும், தமிழ் பெயர்கள் சூட்டும் பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறி திமுக ஆட்சியில் அவ்வாறு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு ரத்து செய்வதால் 50 கோடி ரூபாய் ஆண்டிற்கு இழப்பேற்படும், ஆனால் தமிழ்ப் பற்று பெருக, தமிழ் வளர்ச்சியடைய அவ்விழப்பை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

ஆனாலும் திமுக அரசின் அறிவிப்பு அப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை இங்கே நினைவு கூறலாம்.

புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டதைப் போலல்லாமல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு கேளிக்கை வரிக்காக மனுச் செய்திருக்கும் படங்களை புதிய ஆணைப்படி மதிப்பிடக்கூடாது என ஒரு சிலர் கோருகின்றனர்.

Read more...


திமுக பாமக உறவு முறிந்தது


திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.

பாட்டாளி மக்கள் கட்சி இனி வருங்காலங்களில் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தன் தலைமையிலேயே மாற்றணி ஒன்று அமைத்து அனைத்து தேர்தல்களையும் சந்திப்பதென்று முடிவு செய்திருக்கிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனி அணியே அமைக்கப் போவதாகவும், பா.ம.கவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும் இயக்கங்களும் அவ்வணியில் இணையவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று சென்னையில் கூடிய அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு துறைகளில் தமிழகம் பின் தங்கிவிட்டதாகவும், மதுவினால் இளைஞர்கள் சீரழிவதாகவும், ஊடகங்கள் மனிதர்களை சிந்திக்கவிடாமல் செய்வதாகவும், தமிழர்களின் உரிமை பறிபோவதாகவும், ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்றும், இந்நிலையில் பா.ம.கவின் கொள்கைகளுக்காகப் பாடுபட தனித்து நின்றே போராடவிருப்பதாகவும் அத்தீர்மானம் மேலும் கூறுகிறது.

முன்னதாக பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர்கள் அனைவரும் திமுக, அ.இ.அ.தி.மு.க இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடத்தால் வீழ்ந்தோம், எனவே தான் தனித்து தமிழர் நலன் காக்கப் புறப்படும் முடிவு என்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இ அ தி மு க கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 30 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் தனி அணி அமைக்கப் போவதாக தீர்மானம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Tuesday, July 26, 2011


நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்


நடிகர் ரவிச்சந்திரன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் 25.7.11 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
காலஞ்சென்ற இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் ரவிச்சந்திரன். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.

அவர் நடித்த வெற்றிப் படங்களில், அதே கண்கள், நான், மூன்றெழுத்து, குமரிப்பெண் உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பிரபல மலையாள திரைப்பட நடிகையான ஷீலாவை அவர் மணந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும், 1960 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் ஜெய்ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தமக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு நடித்து வந்தனர்.

திருச்சியில் பிறந்த ரவிச்சந்திரன், தனது ஆரம்ப படிப்புக்காக மலேஷியா சென்றார். பின்னர் இந்தியா திரும்பி திருச்சி புனித ஜோசஃப் கல்லூரியில் பயின்றார்.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், பெரும்பாலும் கதாநாயகனாகவே நடித்தார். மேலும் நகைச்சுவை பாத்திரங்களிலும் அவர் பரிமளித்தார்.

சிறந்த நடிகராக விளங்கிய ரவிச்சந்திரன், திரைப்படங்களை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதில் அவர் பெரிய அளவில் அவர் வெற்றி பெறவில்லை.

Read more...


'இலங்கை தோற்று விட்டது'- சந்திரிகா


சந்திரிகா குமாரதுங்க
போரில் வெற்றியடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் இனங்கிளுக்கிடையிலான சமாதானத்தை வென்றெடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக, சிறுபான்மை இன மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணர் ஞாபகார்த்த நிகழ்வில் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார்.

சானல் 4 வீடியோ


சந்திரிகா மற்றும் மகிந்த -2005 இல்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி சானல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட விவரணப் படத்தில் தெரியவந்த கொடூரங்களைப் பார்த்த பின்னர், தொலைபேசியில் பேசிய அவரது வெளிநாட்டிலுள்ள இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேம்பி அழுததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது உரையில் கூறியுள்ளார்.

அவரது மகன், தன்னை சிங்களவர் என்றோ இலங்கையர் என்றோ சொல்லிக் கொள்வதில் வெட்கமடைவதாக கூறியதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

சானல் 4 விவரணப்படத்தை போலியானது என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்துள்ள சந்திரிகா, தாம் தேசம் என்ற ரீதியில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இலங்கையர்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தந்தை, பிரதமர் பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்த நடவடிக்கையையும் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்தார்.

அதுவே இனக்கலவரங்களை உருவாகவும் சிறுபான்மை சமூகங்கள் வெளியேறவும் போருக்கும் காரணமாகியது எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டினார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அமோக வெற்றியீட்டி, ஜனாதிபதி மகிந்தவின் ஆளும் கட்சி நாட்டின் மற்ற பாகங்களில் வெற்றியீட்டியுள்ளமை இலங்கையின் இனங்களுக்கிடையிலான
வேறுபாட்டை தெளிவாகப் புலப்படுத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Read more...

>> Thursday, May 5, 2011


தேர்வு முறையில் மாற்றம் இல்லை


தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை தொடர்பான இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் புதிய நெறிமுறைகள் பிற்படுத்தப்பட்டோரின் நலனை பாதிக்கும் எனவும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.

சமூக நீதியைக் காக்கும் வகையில் புதிய மதிப்பெண் வரையறைகள் திரும்பப் பெறப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தற்போது மாநிலத்தில் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக பொதுப் பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 சதவீத மதிப்பெண்களும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு 35 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று கூறுகிறார் கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கே.கருணாகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கே கருணாகரன் பேட்டி

கடந்த கல்வியாண்டு முதல் தற்போது இருக்கும் நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் எதிர்வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

புதிய நெறிமுறைகளின் விளைவாய் பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும் என முதல்வர் கருதுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டாமல், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய ஆணையினை திரும்பப் பெறவேண்டுமென்றும் தமிழக அரசு கோருவதாக அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

Read more...


ஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்



பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.
முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது.

அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால் விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

"பின் லாடனின் மனைவி ஒருவர் அமெரிக்காவின் தாக்குதல் அணிச் சிப்பாய் ஒருவரை நோக்கி வேகமாகப் வந்தபோது அவரது காலில் சுடப்பட்டது. ஆனால் அவர் சாகடிக்கப்படவில்லை. பிற்பாடுதான் பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் அச்சமயம் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை." என்று ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

பின் லாடன் கையில் துப்பாக்கி எதுவும் அச்சயமம் இருந்திருக்கவில்லை என்றாலும் பொதுவாக அந்த இடத்தில் பெருமளவான எதிர்ப்பை அமெரிக்கச் சிப்பாய்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், அந்த இடத்தில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்திருந்தது என்றும் ஜே கார்னி கூறியுள்ளார்.

பின்லாடனின் இரண்டு சகோதரர்கள் மற்றும் பெண்ணொருவர் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்படுகிறது. பின்லாடனின் மகன் ஒருவர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பாடு சொல்லப்பபட்டுள்ள விபரங்களில் அது பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.

இப்படிப்பட்ட குழப்பங்களால், பின் லாடனை உயிரோடு பிடிப்பது என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளடது.

பின் லாடன் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி அமெரிக்க அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. மோசமான அந்தப் புகைப்படம் வெளிவந்தால் உணர்வலைகள் தூண்டப்படலாம் என்று வெள்ளை மாளிகைப் ஊடகத் தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

Read more...

>> Friday, March 18, 2011


"இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முயற்சி"


இலங்கை அதிபருடன் இந்தியப் பிரதமர்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

விக்கிலீக்ஸ் தகவல்களை ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்வதை எதிர்க்கவில்லை என்று அமெரி்க்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது.

முகர்ஜி முயற்சியின் 'நோக்கம்'

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, இராணுவம் பெருகின்ற வெற்றி, இலங்கையின் வடக்கிலும் மற்ற பகுதிகளிலும் சகஜ நிலையையை நிலைநாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.

மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரை தாற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் பிறகு மற்ற எல்லா நேரங்களிலுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சிவசங்கர் மேனன் 'யோசனை'

2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் பெற்ற தகவல் கூறுகிறது.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்கள் யார், மற்ற தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதே நேரத்தில், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாரகனுக்காகப் பேசவல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும், நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

2009-ம் ஆண்டு மே 6, 7 தேதிகளில், இலங்கைக்கான பிரிட்டனின் சிறப்புத் தூதர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்தபோது, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதில் 'ஆர்வமில்லை'

ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கவுன்சில் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கைப் பிரச்சினையை சேர்த்து, அறிக்கை வெளியிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத் தூதரிடம் சிவசஙகர் மேனனும், நாராயணனும் கூறியதாக விக்கிலீஸ்க் தகவல் கூறுகிறது.

ஐநா. பாதுகாப்புக் கவுன்சில் அல்லது மனித உரிமைக் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பதைவிட, ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

Read more...


தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு


முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் தேர்தலில் நிற்கவுள்ள தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

119 தொகுதிகளில் திமுக இம்முறை போட்டியிடுகிறது.

கருணாநிதி முதல்முறையாக தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுகிறார். அங்கிருந்துதான் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மகனும் துணை முதல்வருமான ஸ்டாலினும் இதுவரை ஆயிரம்விளக்குத் தொகுதியிலிருந்து போட்டியிட்டுவந்தார். ஆனால் இப்போது அவர் புறநகர் பகுதியிலுள்ள கொளத்தூரிலிருந்து போட்டியிடுகிறார்.

அமைச்சர் க.அன்பழகனும் துறைமுகம் தொகுதியிலிருந்து வில்லிவாக்கத்திற்கு மாறியிருக்கிறார்

அமைச்சர்க்ள் ஆற்காடு வீராசாமி மற்றும் கோசி மணி ஆகியோர் இம்முறை போட்டியிடவில்லை. அவர்கள் உடல்நலம் இடம்தராததே அதற்கு காரணம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அஇஅதிமுக அமைசர் முத்துசாமி ஈரோட்டிலிருந்து போட்டியிடுகிறார், அதே போல அண்மையில்தான் அஇதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த சேகர்பாபு வடசென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

119 தொகுதிகளில் போட்டியிட்டாலும் பெரும்பான்மை இடங்களில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக வேறு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி கூறினார்.

ஜெயலலிதா பிரச்சாரம் ஒத்திவைப்பு

இதனிடையே அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், மார்ச் 18 அன்று மதுரையிலிருந்து தான் துவங்கவிருந்த தேர்தல் பிரச்சாரத்தினை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைப்பதாக இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

Read more...

>> Saturday, March 12, 2011


2 ஜி விவகாரம் - கனிமொழியிடம் விசாரணை


கனிமொழி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்கள்.
2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ரியால்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம், முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து 214 கோடி ரூபாயை வேறு நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அந் நிறுவனம் வழங்கியதாகவும் புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த மாதம் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அத்துடன், அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷரத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 20 சத பங்குகளும், கனிமொழியிடம் 20 சதமும், தயாளு அம்மாளிடம் 60 சத பங்குகளும் உள்ளன.

பின்னர், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 214 கோடி ரூபாய், டி. பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிமஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டதாகவும், அது வருமான வரித்துறைக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், அடுத்ததாக, கனிமொழியிடம் விசாரண நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால், தயாளு அம்மாளிடம் விசாரணை நடைபெறுமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில், அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.பி. குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய விசாரணை குறித்து, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கனிமொழி, ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் ஷரத்குமார் தெரிவித்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தன்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து விவரங்களையும் தெரிவித்ததாகவும் கூறினார்.

Read more...


புலிகள் முகாம் குற்றச்சாட்டு வாபஸ்


இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர்
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்கள் இயங்குவதாக தான் கூறியது தவறு என்று இலங்கைப் பிரதமர் தற்போது தெரிவித்திருக்கிறார்.
கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ண அவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள், தமிழ் நாட்டில் மூன்று ரகசிய இடங்களில் பயிற்சி பெறுவதாக கூறியிருந்தார்.

அதில் இந்திய அரசாங்கத்துக்கு சம்பந்தமிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டவில்லை.

ஆனால், அதில் ஒரு முகாமில் முக்கிய பிரமுகர்களை கொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக தனக்கு உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து இலங்கையும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்

இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு வன்மையாக மறுத்திருந்தது. தமிழகக் காவல் துறையும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்த பிரதமர் ஜயரட்ண அவர்கள், அந்த விடுதலைப்புலிகள் முகாம்கள் குறித்த கருத்து தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்று கூறினார்.

Read more...


ஜப்பானில் பூகம்பம் - சுனாமி


சுனாமி பேரலைகள்
ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
கரையோர நகரான செண்டாயில் முந்நூறு வரையிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

கரிய நிறத்தில் கடலில் பெருந்திரளாக புகுந்து கார்கள், வீடுகள் படகுகள் போன்றவற்றை நிலத்துக்குள் நெடுந்தூரம் இழுத்து வந்து, பின்னர் அலை பின்வாங்கிபோது எல்லாமும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ரிக்டர் அளவையில் எட்டு புள்ளி ஒன்பது புள்ளிகளை இந்த நிலநடுக்கம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுக் கழகம் கூறுகிறது.

ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் அளவானது அங்கு ஒட்டு மொத்த அழிவவு குறித்த மதிப்பீட்டைச் செய்வதை சிரமாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பெரிய கடற்கரை நகரான செண்டாயும், அதனைச் சுற்றவரவுள்ள பண்ணை நிலங்களும், சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. அதேவேளை, அருகில் உள்ள பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகுஷிமா டேய்சி அணு உலையில் குளிரூட்டும் முறைமை பழுதடைந்ததை அடுத்து அது மூடப்பட்டது. அந்தப்பகுதியில் இருந்த 2000 பேர் வரையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்க்கப்பட்டனர்.

மியாகி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு அணு உலையில் ஒரு தீச் சுவாலையும் ஏற்பட்டது.

தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரியுள்ளது.

ஜப்பான் அருகே கடலில் நடந்த நிலநடுக்கம் பசிபிக் வட்டகை நாடுகளில் சுனாமி அபாயம் எழுந்துள்ளது.

ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு மீட்டருக்கும் குறைவான உயரமே இருந்ததாகவும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

லத்தீன அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலி ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உருவாகின்ற சில சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளின் மொத்த தரை மட்டத்தை விட உயரமாக இருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, பிலிப்பைன்ஸ், குரில் தீவுகள், தாய்வான் போன்ற நாடுகளை ஒப்பீட்டளவில் உயரமும் சக்தியும் குறைவான சுனாமி அலைகள் சென்றடைந்துள்ளன.

Read more...

>> Friday, March 11, 2011


விடைபெறுகிறேன் - தலாய் லாமா


தலாய் லாமா
நாடு கடந்த நிலையில் செயல்பட்டுவரும் திபெத் அரசாங்கத்தின் அரசியல் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகப் போவதாக திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரங்களை மற்றவரிடம் அளிக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு உள்ளதை அவர் நெடுங்காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தனது அதிகாரத்தை மற்றவரிடம் முறையாகக் கையளிப்பதென்பது அடுத்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

திபெத்தில் கம்யூனிஸ ஆட்சி வந்ததுக்கு எதிராக 1959ல் நடந்த வெற்றியடையாத கிளர்ச்சியின் ஆண்டு விழாவில் அவர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

அந்த கிளர்ச்சி தோல்வியடையவேதான் அவர் திபெத்தை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது.

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு எல்லோரையும் ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

புத்தரின் மறுபிறப்பு

பௌத்த மதத்தைச் சேர்ந்த திபெத்திய மக்கள் தலாய் லாமாவை புத்தரின் மறுபிறப்பாகக் கருதுகின்றனர். தமது ஆன்மிகத் தலைவர்களின் மறுபிறப்பு வரிசையில் தற்போதைய தலாய் லாமாவை 14ஆவது மறுபிறப்பாக அவர்கள் நம்புகின்றனர்.

"திபெத்துக்கு என்று தனியொரு அரசியல் தலைவர் தேவை. அவர் திபெத்திய மக்களால் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் தேர்தெடுக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்" என்றும் அவரிடம் தன்னுடைய அதிகாரங்களை தான் வழங்க விரும்புவதாகவும் தலாய் லாமா தற்போது கூறியுள்ளார்.

தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது அவருக்கு 75 வயதாகிறது.

திபெத்துக்கு விடுதலை வென்றுதரும் போராட்டத்தில் தான் மனம் தளர்ந்துவிடவில்லை, தன்னுடைய பொறுப்புகளை தான் கைவிடவும் விரும்பவில்லை. ஆனால் மாற்றம் வருவதற்கான தருணம் வந்துவிட்டதால்தான் தான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளதாக தலாய் லாமா கூறுகிறார்.

நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்தான். அதற்கென பிரதமர் ஒருவரும் இருக்கிறார். ஆகவே தலாய் லாமா தற்போது கையளிக்க விரும்பும் அதிகாரங்கள் என்பவை சட்டங்களில் கையெழுத்திடுவது, பொறுப்புதாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்துவைப்பது போன்ற சின்னச் சின்ன அதிகாரங்கள்தான்.

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் என்ற முக்கியமான பங்கில் தலாய் லாமா நீடிக்கவே செய்வார்.

சீனா சாடல்

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

தற்போதைய தலாய் லாமா இறந்த பின்னர் அடுத்த தலாய் லாமாவாக வருபவரை யார் தேர்ந்தெடுப்பது என்ற விடயத்தில் பெய்ஜிங்கிற்கும் நாடு கடந்து வாழும் திபெத்தியருக்கும் இடையில் இடையில் நடக்கும் அதிகாரம் போட்டி தற்போதைய விஷயங்களுக்கு பின்னணியில் உள்ளது எனலாம்.

Read more...


"தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை"


தமிழக காவல் துறைத் தலைவர் லத்திகா சரண்
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் புதன் கிழமையன்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாக ஜயரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் அவரது புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலோர பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லத்திகா சரண் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில் சென்னையில் புத்த மையம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றவகையில் ஜயரதன் கூறியிருந்தார். அதுவும் தவறான தகவல், தாக்குதலை நட்த்தியது இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள் அல்ல என லத்திகா சரண் மேலும் கூறியிருக்கிறார்

Read more...


இலங்கை துவக்க ஆட்டக்காரர்கள் புதிய சாதனை


துவக்க ஜோடி 45 ஒவர்கள் வரை விளையாடியது
ஐ சி சி உலகக் கோப்பையின் ஏ பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியை இலங்கை அணி எளிதில் வென்றது.
கண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி இலங்கை அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான உபுல் தரங்கவும், திலகரத்ன தில்ஷானும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 282 ரன்களைக் குவித்தனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் இந்த அளவுக்கு ரன்களை இது வரை எடுத்ததில்லை. இலங்கை அணி 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 133 ரன்களை எடுத்திருந்த உபுல் தரங்க ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மேலும் ஐந்து ரன்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ரன்களை எடுத்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும்.

இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் ஜெயசூர்யாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ரன்களை எடுத்திருந்தனர்.

திலகரத்ன தில்ஷான் 144 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக வலுவான துவக்கத்தை முழுமையாக இலங்கை அணியால் பயன்படுத்தக் கொள்ள முடியாமல் போயிற்று. 50 ஒவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வேகமாக தமது ஆட்டத்தை துவக்கினர். இருந்தும் 116 ரன்களை அந்த அணி எடுத்திருந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் ரெஜிஸ் சக்காபா ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தன. ஜிம்ப்வே அணியின் மற்ற துவக்க ஆட்டக்காரரான பிரண்டன் டெய்லர் அதிக பட்சமாக 80 ரன்களை எடுத்தார். ஜிம்பாப்வே அணி 188 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

Read more...

>> Wednesday, March 9, 2011


எதிர்காலம்: உலக விதைகள் காப்பகத்தில்!


விதைகள் காப்பகத்துக்கான சுரங்கவழிப் பாதை
உலகின் மிக முக்கியமான விதை காப்பகங்களில் ஒன்றான ஸ்வால்பார்ட் காப்பகம், தனது மூன்றாவது ஆண்டு பூர்த்தியை எட்டியிருக்கின்றது.
94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

விதைகளின் வடிவத்தில் இந்த அரியவகைத்தாவரங்களின் டீ.என்,ஏ மரபணுக்களை களஞ்சியப்படுத்தி வைப்பது, அவற்றின் எதிர்கால இருப்புக்கும் புதியவகை இனவிருத்திகளை கண்டறிவதற்கும் மிக அத்தியாவசியமானது என்கிறார் அமெரிக்க தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த விஞ்ஞானி
கிரிஸ்டின் ஃப்லனாகன்.

நோர்வேயின் உறைந்த பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் உலக விதைகள் காப்பகம், எந்தவொரு அவசரநிலையின் போதும் உலக உணவு விநியோகத்துக்கு பாதி்ப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வதேச முயற்சி.


காப்பகத்துக்குச் செல்லும் பெரு நாட்டு உருளைக் கிழங்கு
பெருவைச் சேர்ந்த லிமா வகை பாலைவன அவரையினங்கள், எதியோப்பாவைச் சேர்ந்த தாவரயினங்கள், பாலைவன பருப்புவகைகள் மற்றும் சீனாவின் சோயா அவரையினங்கள் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்க விவசாயத்துறை அதிகாரிகளால் 1920களில் சேகரிக்கப்பட்ட விதையினங்களும் இப்போது இந்த வடதுருவத்து ஸ்வால்பார்ட் காப்பகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தாவரயினங்களில் அடங்குகின்றன.

பல பாகங்களிலும் உள்ள விதை வங்கிகள் பல இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இப்போது இந்த உலக விதைகள் காப்பகம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


'பனிப்பாலைவனத்தில்' ஸ்வால்பாட் காப்பகத்தின் நுழைவாயில்
எகிப்தில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, பாலைவன தாவரயினங்களில் ஈடுசெய்ய முடியாத அரியவகை மரபணுக்கள் சேமிக்கப்பட்டிருந்த இரண்டு விதைவங்கிகள் நாசகாரர்களினால் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஆறுலட்சம் வகையான விதைகள் ஏற்கனவே சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, ஸவால்பார்ட் உலக விதைகள் காப்பகத்தில் காட்டு தாவர இன வகைகளை தேடிப்பெற்று சேமித்துவைக்கும் தேவைக்காக நோர்வே அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.

Read more...


ஆண்-பெண் சமத்துவப் பட்டியல்


பெண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினமான இன்று ஆண் - பெண் சமத்துவத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி உலக பொருளாதார மன்றம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா செவ்வி
இந்தப் பட்டியலில் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ முன்னணியில் வந்துள்ளதென்பதும், முஸ்லிம் உலகில் முற்போக்கான நாடாகப் பார்க்கப்படும் துருக்கி, இப்பட்டியலில் மிகவும் கீழாக வந்திருப்பதென்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உரிமைகளில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கக் கூடிய வெற்றியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.


வ.கீதா கருத்து
ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.
இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிறிய ராஜ்ஜியமான லெசோதோ எட்டாவது இடத்தில் வந்துள்ளது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாட்டை விடவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகளை விடவும் ஆண்- பெண் சமத்துவத்தில் இந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பலருக்கு வியப்பைத் தந்துள்ளது.

இந்த நாட்டின் ஜனத்தொகை 18 லட்சம் மட்டுமே, அந்த சிறிய தொகையிலும் பாதிக்கும் அதிமானோர் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனாலும் ஆண்-பெண் சமத்துவத்தில் பல செல்வந்த நாடுகளை லெசோதோ விஞ்சியுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி நிலை, சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள உரிமைகள் போன்றவற்றை மதிப்பிட்டு ஒரு சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் எந்த அளவில் உள்ளதென்பதை உலக பொருளாதார மன்றம் கணக்கிட்டிருந்தது.

அந்த நாட்டின் அமைச்சர்களில் ஐந்தில் ஒருவர் பெண். காவல்துறையின் தலைமை அதிகாரி பெண், ஆண் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவான பெண் பிள்ளைகள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனராம்.

லெசோதோவில் ஆண் பெண் சமத்துவச் சூழல் வியக்கவைக்கும் நல்ல நிலையில் இருக்கிறதென்றால், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் துருக்கியோ இந்தப் பட்டியலில் மிகவும் கீழே வந்திருக்கிறது.

பெண்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதில் துருக்கிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையே இது காட்டுவதாக அந்நாட்டின் பெண்ணுரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து பெண்களை குடும்ப உறுப்பினர்களே கொல்லும் சம்பவங்கள் அங்கு தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டதாம். துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கடைப்பிடித்துவரும் இஸ்லாமியப் பழமைவாதக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் என்று ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துருக்கியப் பிரதமர் ரெஜெப் தயிர் எர்தோவான் ஆற்றிய ஒரு உரையில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.

இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

Read more...


திமுக-காங்கிரஸ் உடன்பாடு


காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் காங்கிரஸுக்கு விட்டுத்தருவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு, பிறகு 63 தொகுதிகள் கேட்பது நியாயமில்லை என்று கூறிய திமுக, கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை உடன்பாடு ஏற்பட்டது.

Read more...

>> Friday, February 25, 2011


கொக்கோ கோலாவுக்கு சிக்கல்


கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழி
மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது.

அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன.

கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது.

Read more...


லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
லிபியாவில் அதிபர் கேர்ணல் மம்மூர் கடாஃபிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டிரு்பபதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மீ்ட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை அறிவித்தார்.

"லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு கப்பல்கள் அங்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கப்பல் ஏற்கெனவே எகிப்தை அடைந்துவிட்டது. அங்கிருந்து பென்காசி நகருக்குச் செல்லும். பென்சாகி விமான நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் கப்பல்களை ஏற்பாடு செய்து இந்தியர்களை மீட்பதுதான் சரியாக இருக்கும் என இந்தியத் தூதரும் தெரிவித்திருக்கிறார். அதனால், அதிக கப்பல்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார் அமைச்சர் கிருஷ்ணா.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

லிபியா மட்டுமன்றி, ஏமன், பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், மிகுந்த அத்தியாவசியமாக இருந்தால் தவிர, லிபியா, ஏமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மீனவர் பிரச்சினை குறித்தும் அமைச்சர் கிருஷ்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்றதாகவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேரடியாக கொழும்பு சென்று இந்திய அரசின் கவலையை வெளிப்படுத்தியதுடன், அதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில், 136 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டு, இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்ட அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதுதான், அவர்கள் கைது செய்யப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் முக்கியக் காரணம் என்று இந்த அவைக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆனால், எல்லை தாண்டிச் செல்கின்ற காரணத்தால் அவர்கள் மீது பலப்பிரோயகத்தை உபயோகிப்பது முறையல்ல என்று கிருஷ்ணா குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மீனவர்கள் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

மீன் வளம் தொடர்பான இரு நாட்டு கூட்டு செயல்பாட்டுக் குழுக்களும் மார்ச் மாதம் கூடிப் பேச உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இரு நாட்டு மீனவர் அமைப்புக்களும் தொடர்ந்து ஒருங்கிணைப்புக்களை வலுப்படு்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அது நிலைமை சீரமைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

Read more...


தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பவில்லை - அதிகாரிகள்


பென்காசியில் கலவரம்
கலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள் லிபியாவின் பென்காசி பகுதியில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் இப்போதைக்கு தாயகம் திரும்ப விரும்பவில்லை எனக்கூறிவிட்டதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பென்காசியிலேயே தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், கலவரம் மூண்டவுடன் அவர்களில் பெரும்பாலானோர் வேறு இடம் சென்றுவிட்டதாகவும், மீதம் 22 பேர் மட்டும் முன்னர் வசித்த இடத்திலேயே இருப்பதாகவும், அவர்களும் தமிழ்நாடு திரும்புவது குறித்து எவ்வித முடிவும் இன்னமும் எடுக்கவில்லை என்றும் தமிழோசையிடம் பேசிய அதிகாரிக்ள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்ட்த்தைச் சேர்ந்த முருகையா இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன், தமிழக அரசு புதுடில்லியிலுள்ள தமிழக ஆணையர் ஆனந்த் மூலம் லிபியாவிலுள்ள தூதரகம் மூலம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போதுதான் முருகையா விபத்தில்தான் இறந்தார் என்பது உறுதி செய்ய்ப்பட்டதாகவும் தமிழக அரசு கூறுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் எப்போது திரும்ப விரும்பினாலும் அவர்களுக்கு போதிய உதவிகள் செய்து தருமாறும் தூதரகத்திடம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது.

இதனிடையே அரசுப்படையினர் சுட்டதில்தான் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்தார் என்றும், இந்திய அரசு உண்மைகளை மறைக்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more...


''ஊழல்கள் குறித்து மன்மோகன் சிங்''


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் மற்றும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பொது வாழ்வில் தூய்மையை நிலைநிறுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

''இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையே தொடர்ந்து பதற்றம் ஏற்படும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றாலும் அவர்களைக் கைது செய்யலாமே ஒழிய, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர், ஊழல் விவகாரம், உள்நாட்டுப் பிரச்சினை, பணவீக்கம், கறுப்புப் பணம், வேளாண் உற்பத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகள், சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேசினார்.

தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் காமன்வெல்த் போட்டி முறைகேடு பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறைகளில் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன என்பதை நான் மறுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.



''தொலைத் தொடர்புத்துறை திட்டங்கள் சரியாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுதான், பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கருதுகிறேன். அது குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுக்கணக்குக் குழு ஆகியவை விசாரணை நடத்தும். அதில் உள்ள கிரிமினல் அம்சங்கள் குறித்து, சிபிஐ விசாரணை நடத்துகிறது. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கும் அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து, உண்மை வெளிவர நடவடிக்கை எடுக்கும்'' என்றார் பிரதமர்.

காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து, போட்டிகள் நடப்பதற்கு முன்னதாகவே புகார்கள் வந்தது குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இதில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று அவைக்கு உறுதியளித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் துணை அமைப்பான ஆன்த்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டில், எஸ் பேண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அரசு அமைத்திருப்பதாகவும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சையை அடுத்து, கேந்திர முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, அந்த உடன்படிக்கையை விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக உள்ள மத்திய இந்தியாவில், 60 மாவட்டங்களில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்டுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம், பழங்குடியின இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read more...

>> Tuesday, February 8, 2011


'வீடு திரும்புமாறு எம்மை நிர்ப்பந்தித்தனர்'


இடம்பெயர்ந்தவர்கள் முறைப்பாடு
கிழக்கு மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பல குடும்பங்கள் பலவந்தமாக வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 சத வீதமான குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவும் நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 197 இலிருந்து தற்போது 101 ஆக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் வடிந்துவரும் நிலையிலேயே இந்தக் குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதிலும், தாம் விருப்பததிற்கு மாறாக எவ்வித நிவாரண உதவிகளுமின்றி வீடு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டதாக சில குடும்பங்கள் கூறுகின்றன.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கண்ணன் கிராமம் ,கண்ணகிபுரம் மற்றும் யுனியன் கொலனி ஆகிய கிராம மக்கள் பாடசாலைக் கட்டிடமொன்றில் தஞ்சமடைந்திருந்தபோது அதற்கு பொறுப்பான அதிகாரிகளினால் தாம் வீடு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டடதாக மக்கள் சிலர் தமிழோசை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்கள் வீடுகளிலும் ,காணிகளிலும் இன்னமும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் அங்கு தங்கியிருக்க முடியாத நிலையே இன்னமும் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றார்கள்.


வெள்ளத்தில் மக்கள் அவதி
இது தொடர்பாக வினவிய போது தமிழோசைக்குப் பதிலளித்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வீடுகளுக்கு திரும்ப முடியாதவர்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க முடியும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நிலமை காரணமாக பிரதேசத்தின் பாடசாலைகள் எதிர்வரும் புதன் கிழமை வரை மூடப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலிருந்து துர இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் உள்ளுரில் சில இடங்களில் இன்னமும் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தாழ்ந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் வெள்ளம் தேங்கியிருக்கின்றது.

Read more...


கருணாநிதிக்கு எதிராக சுவாமி மனு


முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டி, அது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வரின் மீது வழக்கு தொடர அவர் அனுமதி கோருகிறார்.

முதல்வர் கருணாநிதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகளும் வீட்டுமனைகளும் ஒதுக்கியிருப்பதாக புகார் கூறி, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதிவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை முழுவதுமாக ஆதரிப்பதாக என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Read more...


இலங்கை வெள்ள நெருக்கடி- ஐநா அறிக்கை


அவசர நிதியின் அளவை ஐநா மீளாய்வு செய்கிறது
இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு அவசர உதவியாக தேவைப்படுகின்ற நிதியாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தொகையை மீண்டும் மதிப்பீடு செய்து இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.
51 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதித்தேவையாக கடந்த மாதம் ஏற்பட்ட முதற்கட்ட வெள்ளப் பாதிப்பின்போது ஐநா அறிவித்திருந்தது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து 744 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தங்குமிடம் உணவு, குடிநீர் உள்ளிட்ட உடனடி உதவிகளை செய்வதற்கு இந்த அவசர நிதி தேவைப்படுவதாக ஐநாவின் கொழும்பு தலைமையகம் விடு்த்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வாழ்வாதாரங்கள் நாசம்

இதேவேளை, வெள்ளப் பெருக்கு மக்களின் நாளாந்த செயற்பாடுகளை மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.


இலங்கை வெள்ள நெருக்கடி
விவசாயத்தை நம்பி வாழ்கின்ற பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏனைய மக்களும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் கால்நடை பண்ணைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

தமது பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்ட நிலையில் அரசாங்கம் தமக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை மழையில் அழிந்துவிட்டதாக மட்டக்களப்பு வவுணதீவு கமநல அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் காத்தமுத்து பிறைசூடி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, பயிர்களுக்கு காப்பீடு செய்யாதவர்கள் தமது சேதங்களுக்கு பெருமளவு இழப்பீட்டை அரசாங்கத்திடம் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசியி்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பல வாரங்களாக நாட்டில் நீடிக்கின்ற குளிர் காலநிலை காரணமாகவும் வெள்ளப் பெருக்கினால் பரவிவருகின்ற சில நோய்த் தாக்கங்களாலும் பெருமளவிலான கால்நடைகள் அழிவடைகின்ற நிலையில் தமது பால் பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியை நம்பியிருக்கின்ற குடும்பங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

2015 இல் நாடு பாலில் தன்னிறைவடைய வேண்டுமென அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில், அதனை அடைவதற்கான அடிப்படை உதவிகள் எதுவும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வில்லையென இலங்கை பாற் பண்ணையாளர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் லொக்கு பண்டா ஜயசுந்தர கூறுகின்றார்.


இலங்கை வெள்ள நெருக்கடி
நாட்டில் ஏற்கனவே தேங்காய் விலையேற்றத்தின் பாதிப்பால் புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத் தீவனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தாம் தற்போது வெள்ளத்தின் பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளதாக
லொக்கு பண்டா ஜயசுந்தர சுட்டிக்காட்டுகின்றார்.

தற்போதைய காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் நாட்டில் பாலுற்பத்தி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டுமென கோரி கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சருக்கு தமது அமைப்பு கடந்த மாதம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதுதொடர்பில் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் ஜயசுந்தர கூறினார்.

Read more...

>> Monday, February 7, 2011


தாயின் தவிப்பு


தாயாருடன் முத்துவேல்-பல ஆண்டுகளுக்கு முன்
தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனை இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய நடுவணரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தாயார் பாப்பம்மாள்-செவ்வி


செல்லையா முத்துவேல்-செவ்வி


சட்டத்தரணி பாலு-செவ்வி

தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார்.

1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார்.

அனால் 2002 ஆம் ஆண்டு இவரது இந்திய கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவருக்கு தெரிவித்தனர்.


முத்துவேல் தாயாருடன்-பல ஆண்டுகளுக்கு முன்
இப்படி ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பதை இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் கூற மறுத்து வருவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த முத்துவேல் செல்லையா அவர்கள், தனக்கு மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளுக்கும் இந்தியா செல்ல கடவுச்சீட்டு மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக, 90 வயதான தனது தாயார் பாப்பம்மாள் அவர்களை தன்னால் இந்தியா சென்று நேரில் சந்திக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பார்வை மங்கி, காது கேட்கமுடியாத நிலையில் இருக்கும் தனது தாயாரை நேரில் சென்று சந்திக்க விரும்பி தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கடந்த 13 ஆண்டுகளாக பயனளிக்கவில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது தாயார் பாப்பம்மாள் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

அதில் இந்தியாவில் பிறந்த தனது நான்காவது மகனான முத்துவேல் செல்லையா இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பில் இந்திய நடுவணரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Read more...


பறவைகளின் மூளை அளவு குறைவு


பறவைகளுக்கு பாதிப்பு
செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்தில் காணப்படும் பறவைகளின் மூளை அளவானது 5 சதவீதம் வரையில் குறைவாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த பகுதியில் காணப்பட்ட சுமார் 48 இனங்களை சேர்ந்த 550 வகையான பறவைகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி பிளோஸ் ஒன் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

நார்வே, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கடந்த 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு ஆலையின் நான்காவது உலை வெடித்து சிதறியது.

இதனை தொடர்ந்து வடக்கு துருவத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் கதிர்வீச்சின் தாக்கங்கள் காணப்பட்டன.

விபத்து ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். எனினும் கதிர் வீச்சின் தாக்கம் இந்த பகுதியில் உள்ள உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.

இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உயிரினங்களின் வகைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே போன்று கதிர் வீச்சு உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிய உயிரினங்களின் மரபணுக்கள் சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தான் பறவைகளின் மூளைகள் கிட்டதட்ட 5 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பல பறவைகள் முட்டையாக இருக்கும் கட்டத்தில் அழிந்துள்ளன.

பறவைகள் கடுமையான சூழ்நிலைக்கு உள்ளாகும் போது தங்களுடைய உடல் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு. உதாரணமாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் சக்தியை சேமிப்பதற்காக தங்கள் உடலின் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு.

ஆனால் மூளையை சுருக்குவது என்பது ஒரு புதிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இது கதிர்வீச்சினால் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிந்தால், பறவையின் மற்ற உடல் பாகங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

Read more...


கிழக்கில் தொடரும் பாதிப்பு


மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வாவிகளிலும் ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு முதலைகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் வீடுகளைப் பார்வையிட சென்றிருந்த போது முதலைகளின் நடமாட்டத்தை அங்கு காண முடிவதாக கூறுகின்றார்கள்.

வாவி மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் கால்நடைகளும், வளர்ப்பு பிராணிகளும் முதலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பழுகாமம் நலன்புரி முகாமொன்றில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றார்கள்.

நேற்று சனிக்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள அம்பிலாந்துறையில் விவசாயியொருவர் முதலைக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

தனது வீடு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்கு வெளியேயுள்ள மலசல கூடத்திற்கு சென்று சுத்தம் செய்வதற்காக பாத்திரமொன்றில் வெள்ள நீரை அள்ளிய போது முதலையொன்று தனது கையைக் கவ்வியதாக சம்பவம் தொடர்பாக 45 வயதான விவசாயி நாகப்பன் பரமானந்தம் கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ள அதே வேளை மேலும் இரண்டு சிறுவர்கள் காணமடைந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் அச்சம், வாழ்வாதாரங்களில் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்களினால் வீடுகளுக்கு திரும்ப தயங்குகின்றனர்.

குற்றச்சாட்டு

இதற்கிடையே, இலங்கையில் விவசாயத்திலும் மீன்பிடி தொழிலிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபங்களை அனுப்பியுள்ள போதிலும், கடந்த கால அழிவுகளின் போது ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயங்குவதாக அந்தக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இவ்வாறான அழிவுகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, பொது நிகழ்வுகளிலும் பெரிய அமைச்சரவையை அமைத்து வரிச்சலுகையுடன் கூடிய வாகனங்களை இறக்குமதிசெய்து அமைச்சர்களின் நலன்களிலும் அதிகளவு வீண் செலவினங்களைச் செய்வதாகவும் விஜித்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் குற்றச்சாட்டை இலங்கையின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு நிவாரணங்களில் பணச்சிக்கல் வராதவாறு மாவட்டச் செயலாளர்கள் ஊடாக போதுமான நிதியை தாம் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசிக்குத் தெரிவித்தார்,

Read more...


வெள்ளத்தால் மன்னார் கடும் பாதிப்பு


வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையின் வடக்கே, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படாத அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மன்னார் மாவட்டத்தின் அயல் மாவட்டமாகிய அனுராதபுரம் மாவட்டத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக அங்குள்ள குளங்கள் யாவும் நிறைந்து வழிவதுடன் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதனால் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் அபாயகரமான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீரை ஏந்தி வருகின்ற அருவியாற்றின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் 22 அடி உயர்ந்திருப்பதனால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ள அபாயத்திலிருந்து நானாட்டான், முசலி பிரதேசங்களில் அருவியாற்றின் கரைகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 2800 பேர் மன்னார் நகரத்தில் உள்ள 6 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மடு உட்பட வேறு இடங்களுக்கும் மக்கள் பாதுகாப்பிற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

நானாட்டான் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வெள்ள அபாயம் குறித்து மக்கள் அங்கு பெரும் அச்சமடைந்துள்ளதாகவும். நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் இங்குள்ள மக்களை பாதுகாப்பான வேறிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக் கூறினார்.

அருவியாற்றின் வெள்ள நீர் மட்டம் அரையடி குறைந்துள்ளதாகவும் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் வவுனியா பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் குமாரவேலு சிவபாலசுந்தரம் கூறியுள்ளார்.

அருவியாற்றின் ஒரு பகுதி வெள்ளம் வவுனியா மன்னார் வீதியில் கட்டையடம்பன் பகுதியில் குறுக்கறுத்து உயரமாகப் பாய்வதனால் இந்த வீதியின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மதவாச்சி பகுதியில் ஏ9 வீதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், வவுனியா மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மாற்று வீதிவழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரத்தில் இருந்து ரயில் மூலமாகப் போதிய எரிபொருளும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter