>> Tuesday, July 23, 2013

படங்களில் பட்டாம்பூச்சிகள் : பிரிட்டனில் ஆய்வு

Read more...

“டெசோ ஆர்பாட்டம் இந்திய அரசின் நிலையை மாற்றும்”

டெசோவின் முந்தைய ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
டெசோவின் முந்தைய ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் நடத்தப்படவிருக்கும் ஆர்பாட்டம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 8-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தலைநகர் புது தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமையகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புது தில்லியில் திமுக நடத்தும் இந்த ஆர்பாட்டம் அரசியல் நோக்கங்களுக்கானதல்ல என்று பிபிசி தமிழோழையிடம் கூறிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் மாற்றத்தை தமது கட்சியால் ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

Read more...

இலங்கையில் முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுமா?

வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி, கடந்த வாரம் தமிழோசையிடம் கூறியிருந்தார்.
ஆதரவாளர்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"வாக்குகள் சிதறும் வாய்ப்பு"



வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது இயலாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கட்சி உறுப்பினர்களுடன் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்
வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கியுள்ளதையும் மறந்துவிட முடியாது எனவும் கூறும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளை சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும் கூறுகிறார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Read more...

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை

ஆண் குழந்தை --- கேட் , வில்லியம் தம்பதியர் ( ஆவணப்படம்)
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.
குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
கேட் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் மருத்துவமனைக்கு வெளியே பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது.

Read more...

>> Monday, July 22, 2013

இந்துத்துவ தலைவர்களின் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு


கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்கள் இருவரின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு அமைத்திருக்கும் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவானது கடந்த வெள்ளியன்று (ஜூலை19,2013) இரவு தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஜூலை ஒன்றாம் தேதி வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்திருக்கிறது. இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவானது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையின் மேற்பார்வையில் விசாரணையை நடத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷின் படுகொலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் மு கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரமேஷின் கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை தமிழக காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம்-நாமக்கல் மண்டல பா.ஜ.க மகளிரணி செயலர் ராஜேஸ்வரி ( வயது 45 ) தீக்குளித்ததாகவும், சிகிச்சை பலனின்று அவர் இறந்துவிட்டதாகவும், பாஜக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்து இயக்கத்தலைவர்கள் தொடர்ந்து குறிவைத்து கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வருவதாக குற்றம் சுமத்தியிருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இதை கண்டிக்கும் நோக்கத்தில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 22, 2013) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Read more...

"கட்டாய தற்காலிக கிராமப் பணி மருத்துவர்களுக்கு எதிரானது"



இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்று முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கிராமப் புறங்களில் ஒரு வருடத்துக்கு தற்காலிக பணிசெய்வதை கட்டாயமாக்குவது என்கிற ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
தற்காலிகமாக மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் செயல் நீடித்தால், மருத்துவர்களுக்கு நிரந்தர அரசு வேலை என்பது இல்லாமல் போய்விடும் என தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் பயின்றவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்வதை தவிர்க்கிறார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று முன்வைக்கப்படும் வாதத்தை அவர் மறுத்தார்.
மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் முதலில் கிராமப் பகுதிகளிலேயே வேலை வழங்கப்படுகிறது என்றும், நிரந்தர வேலைக்காக கிராமப் புறங்களுக்கு செல்வதை மருத்துவம் பயின்றவர்கள் தவிர்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
நிரந்தர வேலைக்கான வாய்ப்பு வரும்போது மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவதை விரும்பவே செய்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்

தவிர தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவராக ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்போது, தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று டாக்டர் பிரவீன் குற்றம்சாட்டினார்.
தாதிகள் போன்றோர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் பயிற்சி மருத்துவர் செய்ய வேண்டி வருவதால், ஒரு மருத்துவராக தாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது என்று அவர் தெரிவித்தார்.
அளவுக்கதிமான வேலைப்பளுவால், நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சேவையின் தரம் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் பிரவீன் குறிப்பிட்டார்.

Read more...

'வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ்

ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
'வடக்கு மாகாணசபைத் தேர்தல் எனது கனவு': டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.


வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றியும் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் இந்தக் கருத்தினைக் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்துகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட-இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Thursday, July 11, 2013


இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது

மீடியா பிளேயர்


இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ கே பட்நாயக் மற்றும் எஸ் ஜே முகோபாத்யாய அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தால் வழக்கு ஒன்றில் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினாலும் அந்த நபர் இந்தத் தீர்ப்பின்படி பதவியிழப்பார்.
எனினும் இந்தத் தீர்ப்பு தங்களது இன்றையத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

"வரவேற்கத்தக்கத் தீர்ப்பு"

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்க கட்சிகள் தயங்கும் என்றும் இந்தியாவின் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையாளர் என் கோபாலஸ்வாமி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் தற்போது பதவியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திலுள்ள ஒரு பிரிவுக்கான விளக்கம் என்பதால் இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரவும் முடியாது என்றும் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

Read more...


சீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்

இலங்கையில் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதைக்கு ராமன் அக்கினி பரீட்சை செய்த்தாகக் கூறப்படும் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் கட்ட மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்து, இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்தக் கோவிலுக்கான திட்ட வரைபடம் கூட தயாராகிவிட்டதாக இன்று பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது
இதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என்று தெளிவாகத் தெரியாத நிலையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் சில இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இலங்கையின் சுற்றுலாத்துறை சில ஆண்டுகளுக்கு முன்னர் சில நடவடிக்கைகளை எடுத்தது.


இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த , இலங்கை உல்லாசப் பயணத்துறையின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ஸ்ரீநிவாசன் கலைச்செல்வம் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற ராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பல இடங்கள் இலங்கை அரசின் சுற்றுலாத்துறையால், இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டன. இதன் பலனாக இந்தியாவிலிருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.
ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகக் கருதப்படும் திருகோனேஸ்வரன் கோயில், சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இடம், ஹனுமான் சஞ்சீவி பர்வதத்திலிருந்து, போரில் காயம் பட்ட லக்ஷமணனைக் காப்பாற்ற மூலிகைகளை கொண்டு வந்தபோது , இலங்கையின் ஐந்து இடங்களில் அந்த மூலிகைச் செடிகள் சிந்தியதாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவை இது போல சுற்றுலாத்துறையால் பிரபலப்படுத்தப்பட்டன என்றார் அவர்.

பேராசிரியர் பத்மநாதன் பேட்டி


இலங்கை அரசு ராமகாதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களை இவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவர பயன்படுத்தும் நிலையில், இலங்கையில் ராமர் மற்றும் சீதை வழிபாடு குறித்து சமூகத்தில் இருக்கும் நிலை குறித்து இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவரும். தற்போது கிழக்குப் பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவிக்கொண்டிருப்பவருமான, பேராசிரியர் பத்மநாதன், குறிப்பிடுகையில், பொதுவாக இலங்கையில் ராமர் சீதை வழிபாடு என்பது தமிழர்கள் மத்தியில் வரலாற்று ரீதியில் பெரிய அளவில் இல்லை. பொளத்த சமூகத்திலும் இது இல்லை என்றார்.

Read more...

>> Wednesday, July 10, 2013

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கம்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்த மைக்கேல் நாப்ஸ் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியுடன் மைக்கேல் நாப்ஸ்-லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது
தொடர்ச்சியாக இந்திய அணியின் தோல்விமுகம் மற்றும் மோசமான ஆட்டம் காரணமாகவே அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மைக்கேல் நாப்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும் அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் அணி எந்த வகையிலும் முன்னேறவில்லை என்பதாலேயே அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவர் பதவி நீக்கப்பட்டதாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிக்கும் ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.
இந்தியாவின் விளையாட்டு ஆணையம் ஹாக்கி அணியின் செயல்பாடு குறித்து விவாதிக்க நடத்திய ஒரு ஆய்வுக் கூட்டத்திலேயே அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவை என்கிற முடிவு எட்டப்பட்டதாகவும் பத்ரா கூறுகிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, 80 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா தகுதி பெறாத நிலையிலிருந்து, அடுத்து நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அணியை தகுதி பெறச் செய்தது அவரது ஒரு சாதனை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது

இந்திய ஹாக்கி: தொடரும் தோல்விகள்

இந்தியாவில் ஹாக்கியின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறிகள்
எனினும் மைக்கேல் நாப்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சூழலில், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது, பங்குபெற்ற 12 அணிகளில் கடைசி இடத்தையே பெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அதன் பிறகும் இந்திய ஹாக்கி அணியின் தோல்விமுகம் தொடந்து கொண்டே இருந்தது.
தோல்விமேல் தோல்வி கண்டு வரும் இந்திய ஹாக்கி அணி கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டிகளிலும் கடைசி இடத்தையே பெற முடிந்தது.
மைக்கேல் நாப்ஸ் பதவி விலக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணியின் திறமை மேம்பாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் நெதர்லாந்து நாட்டின் முன்னாள் ரோலன் அல்ட்மான்ஸ், வேறு ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு போட்டி அமைப்புகளாக இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஹாக்கி ஆகியவற்றிடையே தொடர்ந்து சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது தவிர அணியின் பயிற்சியாளாரை நீக்கிவிட்டால் அணி வெற்றிகளை பெற்றுவிடுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter