>> Tuesday, December 21, 2010


படகு விபத்து: இறந்தோர் அதிகம்


கடல் சீற்றத்தால் பாறையில் மோதி உடைந்து தத்தளிக்கும் அகதிகள் படகு
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அருகே பாறைகளில் மோதி அகதிகளின் படகு நொறுங்கி நீரில் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இரான், இராக் மற்றும் குர்து அகதிகளை ஏற்றிய படகு சீற்றம் கொண்ட கடலில் கடந்த புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்களில் 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இரானியர்கள், இராக்கியர்கள் மற்றும் குர்து இனத்தவர்களுமாக அந்தப் படகில் 90 பேர் வரை இருந்திருக்கலாம் என்று ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ரேலியக் கரைகளுக்கு அகதிகளை கடத்தி வருபவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான டொனி அபொட் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே கடலில் நீரின் அடியில் உள்ள குகைகளில் பொலிஸ் சுழியோடிகள் தேடுதல் நடத்திவரும் நிலையில் இந்த தகவலை ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Read more...


ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன்


தொலைதொடர்புத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் எதிர்வரும் புதன்கிழமையன்று (22 டிசம்பர்) விசாரணைக்கு வர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவுக்கு மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருக்கிறது.
தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து சிபிஐ ராசாவின் உறவினர்கள், மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியதாக்க் கூறியது.

இந்நிலையில் ராசா விசாரணைக்கு வரவேண்டுமென சி.பி.ஐ.யிடமிருந்து உத்தரவு அனுப்பப்பட்டது.

சம்மனைப் பெற்றுக்கொண்ட சில மணிநேரங்களில் அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அது வழக்கமான பரிசோதனைதான் என்று பின்னர் தெரிவிக்கப்பட்ட்து.

இதனிடையே ராசா முன்ஜாமீன் மனு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அச்செய்தியை மறுத்துள்ளார்.


நான் சிபிஐயைக் கண்டு பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். ஒரு வக்கீல் என்ற முறையில், சட்டத்தை நான் மதிப்பேன். சட்டத்திலிருந்து தப்ப முயல மாட்டேன்.


ஆ.ராசா

தான் இதுவரை குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. எனவே முன்ஜாமீன் கோருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பதில்

சி.பி.ஐ. சம்மன் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, "அவ்வாறு சம்மன் அனுப்ப்ப்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு ராசா பதில் சொல்லுவார்" என்றார்.

சி.பி.ஐ. சோதனையிலும் கவலைப்பட ஏதுமில்லை என்றார் முதலவர்.


அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். எனவே சி.பி.ஐ. சோதனைகளை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதவில்லை.


முதல்வர் கருணாநிதி

மேலும் ராசாவின் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார் .

தி.மு. கழகத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது என்று கேட்டபோது, "அதை உங்களால் வெட்ட முடியாது" என்று அவர் பதிலளித்தார்.

Read more...


"என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை"

இந்தியாவில் இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்



நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுவினர் செய்யும் விசாரணைக்கு தான் உடன்படத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தொலைதொடர்புத்துறை கண்காணிப்பு அமைப்பான டிராய்யின் முன்னாள் தலைவர் பிரதீப் இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறையினர் திங்களன்று விசாரித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக நடத்தப்படுகின்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்த ஊழலை தான் கண்டும் காணாமல் இருந்துவிட்டேன் என்று கூறப்படுவதை மறுத்தார்.


பிரதமர் என்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விசாரணைக்கு நான் உடன்படுகிறேன்.


பிரதமர் மன்மோகன் சிங்

நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவினர் முன்னர் தோன்றி விசாரணைக்கு உட்பட தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அக்குழுவினருக்கு தான் எழுத்து மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு

இந்த விவகாரம் தொடர்பில் மத்திய அரடின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வழங்கிய அறிக்கையை பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் அப்போதுதான் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

சாதாரணமாக அதிகம் பேசாதவராக அறியப்படுகின்ற பிரதமர் மன்மோகன் சிங், தற்போது வழமைக்கு மாறாக ஆக்ரோஷமாக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என தில்லியுள்ள பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.

ஞாயிறன்று கட்சித் தலைவி சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஊழலை எதிர்த்து போராடுவதற்கான நேற்று ஐந்து அம்சத் திட்டத்தினை தான் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சோனியா திட்டம்

அரசு நிர்வாகிகள், அரசியல்வாதிகள், ஆகியோருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிப்பது, தேர்தலுக்கு ஒதுக்கப்படுகின்ற அரசு நிதியைக் கண்காணிப்பது, அரசாங்க செயல்பாடுகளில் கூடுதலான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, அரசு நிலங்களை தனியாருக்கு ஒதுக்குவதில் அரசியல்வாதிகளுக்குள்ள அதிகாரத்தைக் குறைப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை சோனியா அறிவித்திருந்தார்.


மனசாட்சிக்கும் நேர்மைக்கும் விரோதமாக அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்துகொள்வதென்பது சமுதாயத்தில் ஒரு தொற்று நோயாகப் பரவி வருகிறது


சோனியா காந்தி

இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியபோது ஏலம் நடத்தாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் மத்திய தொலைதொடர்பு துறை ஒதுக்கீடு செய்ததால் இந்திய அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதென்று தேசிய கணக்கு தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.

Read more...

>> Monday, December 20, 2010


யானை- மனிதர் மோதலை தடுக்க நடவடிக்கை


யானைகள்-மனிதர்கள் மோதலைக் கட்டுப்படு்த்த நடவடிக்கை
இலங்கையில் யானைகள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் முகமாக ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுப்படுத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதலில் சுமார் 200 யானைகளும் 60 பொதுமக்களும் பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் யானைகளின் எண்ணிக்கையும் 4000 ஆக குறைந்துள்ளது.

இலங்கையில் பல பாகங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகிறது. மனிதர்கள் யானைகளின் இடங்களை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க இந்த மோதலும் அதிகரிப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் மனிதர்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல், பயிர்களையும் நாசப்படுத்தி விடுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மாதம் இராணுவத்தினரின் உதவியுடன் யானைகள் காட்டுக்குள் துரத்தப்பட்டன. மின்சார வேலிகள் போன்றவை வடக்கு இலங்கையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டன.

தற்போது இந்த நடவடிக்கை விஸ்திகரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பணியில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் எனவும் வனவிலங்குகள் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்றத்தில் கூறினார்.

மூவாயிரம் சிவில் பாதுகாப்பு படையினர் வனவிலங்கு துறையில் பயிற்சி பெறுவார்கள். இவர்கள் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையில் மோதம் இடம்பெறும் இடங்களில் பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். நெல் வயல்களை பாதுகாக்கவும், யானைகளை பாதுகாக்கவும், மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவதை தடுக்கவும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் விரைவில் பணியை ஆரம்பிப்பார்கள். இந்த சிவில் பாதுகாப்பு படையினரால் யானைகள் மேலும் அதிகளவில் கொல்லப்படலாம் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சம் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு நடைபெறாது, ஏனென்றால் சிவில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி போன்றவை கொடுக்கபட மாட்டாது என்றும், யானைகளை பயமுறுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

சமீபத்தில் தான் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்தை வனவிலங்கு காப்பகமாக மாற்ற போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் யானைகள் ஒர் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு அவ்வளவு சீக்கிரமாக செல்லாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...


50வது சதம் அடித்தார் சச்சின்


சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார்.

அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

Read more...


ததே.கூட்டமைப்பு எம்.பிக்கள்-மூதுர் மக்கள் சந்திப்பு


சம்பூரில் இடம்பெயர்ந்தவர்கள்
திருகோணமலைக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு இடம்பெயர்ந்து பல வருடங்களாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாதிருக்கின்ற மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மூதூர் தெற்கு, மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும், கிளிவெட்டி,பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து சுமார் ஐந்துவருடகாலமாக சொந்த குடிமனைகளில் குடியமர்த்தப்படாதுள்ள மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற விரும்புவதையும், தமது வாக்குப்பதிவுகள் சொந்த முகவரிகளிலேயே பதியப்பட வேண்டுமெனவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியதாகவும் மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத் தலைவர் கு. நாகேஸ்வரன் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமது பிரச்சனைகளை வெளிக்கொணர முடிகின்ற போதிலும் தமக்கு உறுதியான தீர்வு கிட்டுமென முழுமையாக திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் நாகேஸ்வரன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்துக்குத் தேவையான நிலப்பகுதித் தவிர ஏனைய பகுதிகள் மக்கள் மீளக்குடியரப் போதுமானவை என்பதால், அந்தப் பிரதேசத்து மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

எந்தக் காரணத்துக்காகவும் மக்கள் அவர்களின் சொந்தக் குடிமனைகளை விட்டு வெளியேற்றப்படக் கூடாது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Read more...

>> Saturday, December 18, 2010




கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு


விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.
லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அதேசமயம் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ராஜாங்க தகவல்களில், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த தகவல்கள், இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் முறிந்த பிறகு, அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலைமைகள் குறித்து பெரிதும் கவலைக்குரிய சூழலை குறிப்புணர்த்துகின்றன.

தூதரகத்தின் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை மேற்கோள் காட்டி, தூதரக அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு, குடும்பத்திற்கு ஒருவரை தமது படையணியில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற தங்களின் பிள்ளைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, ஆயுதம் ஏந்த வைக்க மறுக்கும் குடும்பத்தவரை விடுதலைப்புலிகள் மிரட்டியதாகவும் இந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக்குழுக்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசு ஆதரவளித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.


இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இத்தகைய ஆயுதக் குழுக்களை நடத்தியவர்களில் இரண்டுபேர் தற்போது அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

இவர்களின் குழுக்களின் ஒன்று முகாம்களில் வேலை செய்வதற்காக சிறுவர்களை கடத்தியதாகவும், சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தியதாகவும், தூதரகத்திற்கு தகவல் தருவோர் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

ஆனால் இதில் குற்றம்சாட்டப்படும் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்தனர். தாங்கள் பணம் பறிப்பதிலோ ஆட்கடத்துவதிலோ ஈடுபடவில்லை என்று இருவருமே பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் மறுத்தனர்.

பணம் மற்றும் உணவை தட்டிப்பறித்த குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுக்கள் இரண்டின் மீதுமே இருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இந்த ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரக தகவலில், இடம்பெயர்ந்த தமிழர்களை நடத்தும் தனது நடவடிக்கைகளை இலங்கை அரசு பெருமளவில் மேம்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.

விக்கிலீக்ஸில் இதற்கு முன்பு இலங்கை குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

விக்கிலீக்ஸ் தகவல்கள் தொடர்பில் இந்த மாத முற்பகுதியில் கருத்து வெளியிட்ட இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகம், இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தினசரி நிகழ்வுகள் தொடர்பான திறனாய்வு என்றும், இவையெல்லாம் மனம் திறந்த கணிப்பீடுகளேயன்றி, அமெரிக்க அரசின் கொள்கைகளை குறிப்புணர்த்துவதாக கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

Read more...

>> Tuesday, December 14, 2010


மருத்துவக் கல்வி உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு


இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இது குறித்த அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதுவும் தவிர தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நடைமுறையை கடைபிடிக்கின்றன.

சில மாநிலங்களும், தனியார் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கின்றன. அதேசமயம் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் +2 தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதன் பின்னணியில், இந்திய மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத்தேர்வு நடத்தி மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தது. இதை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் கடுமையாக எதிர்த்தன.

மத்திய அரசின் இந்த முடிவு, மாநில அரசின் உரிமைகளை அபகரிப்பதாகவும், இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், கிராமப்புற மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில் பொதுநுழைவுத்தேர்வு தேவையில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.

இந்த பின்னணியில், இது தொடர்பான வழக்கு விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மத்திய அரசு இது குறித்த அரசாணை எதையும் பிறப்பிக்காத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைக்கு உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பில் இந்திய மத்திய அரசு உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதை எதிர்ப்பவர்கள் அதற்கான காரணங்களுடன் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நிலையில் இது குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொது நுழைவுத்தேர்வு குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்பதற்காக, இந்திய மத்திய அரசு எதிர்வரும் ஜனவரி மாதம் கருத்தரியும் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Read more...


ஆணைக்குழுவின் முன்னர் கருணா சாட்சியம்


பிராபகரனுடன் கருணா( பழைய படம்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்று இலங்கை அமைச்சரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

>> Monday, December 13, 2010


பண்புக்கு கிடைத்த பரிசு


லாட்டரி சீட்டு
மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது.
அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார்.

லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார்.

அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால்
இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது.

பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

அவர் அமெரிக்காவில் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பிலிப்பைன்சில் தனது குடும்பத்தினரை சந்திக்க விடுமுறையில் வந்திருந்தபோது இது நடந்துள்ளது.

Read more...


தேசிய கீதத்தின் மொழி?


மகிந்த ராஜபக்ஸ
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா

Read more...


ஐதேக யாப்பில் மாற்றம்


ஐதேக சின்னம்
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்நிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. ஒரு வழக்கின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அந்த மாநாடு, அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளியன்று வெளியானதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் கட்சியின் யாப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இருந்த நிலைமைக்கு மாறாக கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளுக்கானவர்கள் வருடா வருடம் நடக்கும் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யாப்பில் திருத்தம் செய்யப்பட்டதாக யோகராஜன் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் கட்சியின் நிறைவேற்று சபையின் அங்கத்தவர்களும், நாடாளுமன்றக் குழு அங்கத்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

>> Friday, December 10, 2010


தடையை எதிர்த்து வைகோ வழக்கு


மதிமுக பொதுச்செயலர் வைகோ
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பது செல்லும் என்று இந்த தடைகுறித்து விசாரித்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்த இந்திய அரசு அதற்கு இந்தியாவில் தடைவிதித்தது.

இந்த தடை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு கடந்த மே மாதம் ஆணை பிறப்பித்தது.

இந்த தடை நீட்டிப்பு சரியா என்று விசாரித்த இதற்கான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.

வைகோ வழக்கு

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்பும், அதை உறுதி செய்து தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பும் தவறு என்று வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த வைகோ அவர்கள், இந்திய நடுவணரசு வெளியிட்ட அரசாணையில் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டையும் சேர்த்து தனி நாடாக்க வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளதாகவும், விடுதலைப்புலிகள் அப்படி ஒருபோதும் முயலவில்லை என்றும், எனவே, இப்படியான தவறான தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுவது தவறு என்றும் தனது மனுவில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

Read more...


இலங்கை போர்குற்றம்- ராணுவ தொடர்பா?


சித்திரவதைக்கான சாட்சியங்கள் (ஆவணப்படம்)
இலங்கையில் நடைபெற்ற போரின் போது இலங்கைப் படையினராலும் - விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டிருக்கக் கூடிய போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை முழு விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் இணையதளங்களிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோவை அடுத்து இந்த கோரிக்கையை அம்னெஸ்டியும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் விடுத்துள்ளன.

ஆனால் சுயாதீன விசாரணை வேண்டும் என்று வரும் கோரிக்கைகளை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.

நிர்வாணப்படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட கைதிகளை சிப்பாய்கள் தலையிலும் காலிலும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை இந்த வீடியோ பதிவு காட்டுகிறது. அதில் தரையில் இரண்டு பெண்களின் உடல்கள் இருக்கின்றன. இதில் ஒருவரின் அடையாளத்தை தாம் உறுதி செய்துள்ளதாக அம்னெஸ்டியும், ஹூயூமன் ரைட்ஸ் வாட்சும் தெரிவிக்கின்றன. அவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இறுதிப் போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது. ஆனால் இசைப்பிரியா உள்ளிட்ட கைதிகள் நிராயுத பாணிகளாகவும், போர் முனையில் இல்லாத நிலையிலும் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது என இந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், இந்த வீடியோவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மேதவல நிராகரிக்கிறார்.

இவை தொழில்நுட்ப ரீதியாக திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் என்றும் வேறு யாரோ செய்த போர் குற்றங்களை இலங்கை இராணுவம் செய்தது போல காட்டுவதாகவும், இலங்கையில் நற்பெயரை களங்கப்படுத்தவே இந்த முயற்சி நடப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களுக்கும் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படை பிரிவினருக்கும் இடையேயான தொடர்பை நிரூபிப்பதாக ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.

போர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட சிப்பாய்களை மட்டுமல்லாது அவர்களின் தளபதிகளையும் தண்டிக்க போர் குற்றங்கள் தொடர்பான ஐ நா உடன்பாட்டின் 86 ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. உயர் தளபதிகள் தமக்கு கீழேயுள்ளோர் செய்யும் அத்துமீறல்களை தடுக்கத் தவறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதியோடு லண்டன் வந்திருந்த இராணுவ மேஜர் ஜெனரல் சாகி கலகேவுக்கு எதிராக பிடியாணை வாங்குவதற்கு, ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Saturday, December 4, 2010


பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரிட்டனிலிருந்து கொழும்பை சென்றடைவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அங்கு இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட கண்டனப் பேரணி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் நடந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை எனவும், பிரித்தானியா தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருப்பதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


புலிப் பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது பிரித்தானியா கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிரித்தானி்ய அதிகாரிகளின் ஆதரவு இருந்தபடியால்தான் அவர்கள் புலிக்கொடிகளை அங்கு கொண்டு போராட்டம் நடத்தினார்கள் பொய்யான போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது தேசத்தின் முன்னேற்றப் பாதையைத் தடுக்கத்தான் பிரி்த்தானிய காலனித்துவவாதிகள் முயற்சிக்கிறார்கள்.


விமல் வீரவன்ச

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மீண்டும் புலிகளை தூண்டிவிடும் நடவடிக்கையில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரவன்ச கோசமிட்டார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மௌலானா கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியிலும் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைப் பாதுகாப்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கத் தயாராக இருப்பதாக அலவி மௌலானா இங்கு தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால், இலங்கை மட்டுமல்ல முழு ஆசியாவும் பொங்கியெழும்.


அலவி மௌலானா

இராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை விடயத்தில் மட்டும் பிரித்தானியா இரட்டை வேடம்போடுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே, பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர்களும் அவரது ஆதரவாளர்களும் பெரும் உற்சாக வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.

Read more...

பத்தாயிரம் பேருக்கு பணி நிரந்தரம்

தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 10 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு என்எல்சி நிர்வாகத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆனந்த செல்வம் செவ்வி

ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்தத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிர்வாகத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுதொடர்பாக வெள்ளிக்கிழமை டி.கே. ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில், தொழிலாளர்கள் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்து, அதில் தொழிலாளர்களை உறுப்பினராக்கி, அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் பணிமூப்பு குறித்து முடிவெடுப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்தக் கருத்தை நிராகரித்துவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இந்த வழக்கில் தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த செல்வம்.

Read more...

>> Friday, December 3, 2010


"போர்குற்றங்களுக்கு மஹிந்த பொறுப்பு" விக்கிலீக்ஸ்


இலங்கை போர் காட்சிகள்
இலங்கைப் போரின் இறுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அதிபர் ராஜபக்சேதான் பெருமளவில் பொறுப்பு என்று அமெரிக்க ராஜதந்திரிகள் கருதியதாக தற்போது விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் கசியவிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் - அமெரிக்க அரசுத் துறைக்கு அளித்த ரகசிய தகவல்களை தற்போது விக்கி லீக் வெளியிட்டு வருகிறது.

இதில் இலங்கை குறித்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளில் இலங்கை இராணுவத்தாலும், அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு பொறுப்பேற்றல் குறித்த விடயம் தொடர்ந்து நெருடலான விடயமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத் துறை காங்கிரஸ் அவைக்கு அளித்த அறிக்கையும் - மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் அமைப்பின் அறிக்கையும் விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆவணப்படுத்தியிருந்தும் விடுதலைப் புலி இயக்கத் தலைவர்கள் பலர் போரின் இறுதியில் கொல்லப்பட்டு விட்டதால் இதற்கான பொறுப்பை ஏற்க வெகு சிலரே உள்ளனர் என்கிறது அமெரிக்க ஆவணம்.

ஒரு நாட்டின் அரசாங்கம் தனது இராணுவத்தினர் மீதும், மூத்த அதிகாரிகள் மீதும் போர் குற்றம் இழைத்து தொடர்பான விசாரணையை நடத்தியதாக சரித்திரத்தில் இது வரை எவ்வித சம்பவமும் காணப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கையில் போர் குற்றங்களுக்கான பொறுப்பு நாட்டின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சார்ந்ததாக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தனது தந்தியில் தெரிவித்ததாக விக்கி லீக் ஆவணம் கூறுகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் பேட்ரிகா புடேனிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அனுப்பிய தந்தியில், போர் குற்றஹ்களுக்கு, அதிபர் மகிந்த ராஜபக்சவும்- போரின் போது இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் காரணம் என்று கூறியுள்ளார்.

அதே நேரம் போர் குற்ற விசாரணைகள் பற்றி புலம் பெயர் தமிழர்கள் காட்டும் அளவுக்கு இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பும் தமிழ் தலைவர்கள் அதனால் அதை தொடர்ந்து இப் பிரச்சனையை வைத்திருக்க தமிழ் தலைவர்கள் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கத் தூதர் புடேன்ஸ், கொழும்பிலும், யாழ்பாணத்திலும் பிற இடங்களிலும் தாம் பேசிய தமிழ் தலைவர்கள் போர் குற்ற விசராணை பற்றி பேச இது சரியான தருணம் அல்ல என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்கள் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் சுயாதீன போர் விசாரணைகளுக்கு தான் ஆதரவு அளிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தார். ஆனால் இது போன்ற பகிரங்க வெளிநாட்டு அழுத்தங்கள் எதிர்மாறான பலனைத் தரும் என்று அமெரிக்க தூதர் முன்பு கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசுக்கு போரில் வெற்றியை ஈட்டித் தந்த போர் வீரர்களுக்கு எதிரான ஒரு சர்வதேச சதியே போர் குற்ற விசாரணை கோரிக்கை என்று அதிபர் ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் பிரசாரம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter