>> Friday, July 29, 2011




'போர்க் குற்றம்'- மீண்டும் சானல் 4 செய்தி


இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் பற்றி பிரிட்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புதிய விவரணச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று விடுமாறு, அங்கு இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்படும் இருவரை மேற்கோள் காட்டி சானல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய மற்றும் ஷவேந்திர மீது குற்றச்சாட்டு


மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா
‘எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள்’ என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் கடமையில் இருந்ததாக கூறும், ஃபெர்ணான்டோ என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவர் சானல் 4வுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாக பெர்ணான்டோவை மேற்கோள்காட்டி சானல் 4 கூறுகிறது.

பாதுகாப்புக் கருதி குறித்த இராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறும் சானல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது.

வௌ்ளைக் கொடிச் சம்பவம்


நிராயுத பாணிகள் சுட்டு்க் கொல்லப்படும் காட்சி- சானல் 4
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் ஃபெர்ணாண்டோ சானல் 4 செய்தியில் கூறுகிறார்.

இதற்கிடையே, ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை அவரது அமெரிக்காவில் அவரது தூதரகத்துக்கு வெளியே சானல் 4 செய்தியாளர் சந்துத்துள்ளார்.

இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த இராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சானல் 4வே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார்.

இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், ‘வெள்ளைக் கொடி’ சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ஃபெர்ணான்டோவின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.

இதற்கிடையே, சானல் 4 வில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் மறுத்தார்.

Read more...

>> Thursday, July 28, 2011



திரைப்பட வரி விலக்கு- புதிய நிபந்தனைகள்


அதிமுக அரசின் புதிய நிபந்தனைகள் அறிமுகம்
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று கடந்த திமுக ஆட்சியின் போது இடப்பட்ட ஆணையில் இன்றைய அ இஅதிமுக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது.

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்க்கலாம் என்பதை சுட்டும் விதமாக அளிக்கப்படும் ‘U’ சான்றிதழ் பெறும் திரைப்படங்களே வரிவிலக்கு பெற தகுதியுடையவை என வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட உத்தரவு ஒன்று கூறுகிறது.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.

சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன.
எனவே, கூடுதல் தகுதி வரையறைகளாக தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும்.

நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்


'U' சான்றிதழ் பெறும் படங்களுக்கே வரிவிலக்கு
திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்றும், கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும், வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் பாலிவால் வெளியுட்டுள்ள உத்தரவு தெரிவிக்கிறது.

திரைப்படப் பெயர்களில் ஆங்கிலத்திலேயே வைக்கிறார்கள், இப்போக்கு நிறுத்தப்படவேண்டும், தமிழ் பெயர்கள் சூட்டும் பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறி திமுக ஆட்சியில் அவ்வாறு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு ரத்து செய்வதால் 50 கோடி ரூபாய் ஆண்டிற்கு இழப்பேற்படும், ஆனால் தமிழ்ப் பற்று பெருக, தமிழ் வளர்ச்சியடைய அவ்விழப்பை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

ஆனாலும் திமுக அரசின் அறிவிப்பு அப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை இங்கே நினைவு கூறலாம்.

புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டதைப் போலல்லாமல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு கேளிக்கை வரிக்காக மனுச் செய்திருக்கும் படங்களை புதிய ஆணைப்படி மதிப்பிடக்கூடாது என ஒரு சிலர் கோருகின்றனர்.

Read more...


திமுக பாமக உறவு முறிந்தது


திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.

பாட்டாளி மக்கள் கட்சி இனி வருங்காலங்களில் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தன் தலைமையிலேயே மாற்றணி ஒன்று அமைத்து அனைத்து தேர்தல்களையும் சந்திப்பதென்று முடிவு செய்திருக்கிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனி அணியே அமைக்கப் போவதாகவும், பா.ம.கவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும் இயக்கங்களும் அவ்வணியில் இணையவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று சென்னையில் கூடிய அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு துறைகளில் தமிழகம் பின் தங்கிவிட்டதாகவும், மதுவினால் இளைஞர்கள் சீரழிவதாகவும், ஊடகங்கள் மனிதர்களை சிந்திக்கவிடாமல் செய்வதாகவும், தமிழர்களின் உரிமை பறிபோவதாகவும், ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்றும், இந்நிலையில் பா.ம.கவின் கொள்கைகளுக்காகப் பாடுபட தனித்து நின்றே போராடவிருப்பதாகவும் அத்தீர்மானம் மேலும் கூறுகிறது.

முன்னதாக பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர்கள் அனைவரும் திமுக, அ.இ.அ.தி.மு.க இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடத்தால் வீழ்ந்தோம், எனவே தான் தனித்து தமிழர் நலன் காக்கப் புறப்படும் முடிவு என்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இ அ தி மு க கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 30 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் தனி அணி அமைக்கப் போவதாக தீர்மானம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Tuesday, July 26, 2011


நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்


நடிகர் ரவிச்சந்திரன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் 25.7.11 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
காலஞ்சென்ற இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் ரவிச்சந்திரன். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.

அவர் நடித்த வெற்றிப் படங்களில், அதே கண்கள், நான், மூன்றெழுத்து, குமரிப்பெண் உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பிரபல மலையாள திரைப்பட நடிகையான ஷீலாவை அவர் மணந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும், 1960 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் ஜெய்ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தமக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு நடித்து வந்தனர்.

திருச்சியில் பிறந்த ரவிச்சந்திரன், தனது ஆரம்ப படிப்புக்காக மலேஷியா சென்றார். பின்னர் இந்தியா திரும்பி திருச்சி புனித ஜோசஃப் கல்லூரியில் பயின்றார்.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், பெரும்பாலும் கதாநாயகனாகவே நடித்தார். மேலும் நகைச்சுவை பாத்திரங்களிலும் அவர் பரிமளித்தார்.

சிறந்த நடிகராக விளங்கிய ரவிச்சந்திரன், திரைப்படங்களை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதில் அவர் பெரிய அளவில் அவர் வெற்றி பெறவில்லை.

Read more...


'இலங்கை தோற்று விட்டது'- சந்திரிகா


சந்திரிகா குமாரதுங்க
போரில் வெற்றியடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் இனங்கிளுக்கிடையிலான சமாதானத்தை வென்றெடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக, சிறுபான்மை இன மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணர் ஞாபகார்த்த நிகழ்வில் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார்.

சானல் 4 வீடியோ


சந்திரிகா மற்றும் மகிந்த -2005 இல்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி சானல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட விவரணப் படத்தில் தெரியவந்த கொடூரங்களைப் பார்த்த பின்னர், தொலைபேசியில் பேசிய அவரது வெளிநாட்டிலுள்ள இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேம்பி அழுததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது உரையில் கூறியுள்ளார்.

அவரது மகன், தன்னை சிங்களவர் என்றோ இலங்கையர் என்றோ சொல்லிக் கொள்வதில் வெட்கமடைவதாக கூறியதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

சானல் 4 விவரணப்படத்தை போலியானது என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்துள்ள சந்திரிகா, தாம் தேசம் என்ற ரீதியில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இலங்கையர்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தந்தை, பிரதமர் பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்த நடவடிக்கையையும் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்தார்.

அதுவே இனக்கலவரங்களை உருவாகவும் சிறுபான்மை சமூகங்கள் வெளியேறவும் போருக்கும் காரணமாகியது எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டினார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அமோக வெற்றியீட்டி, ஜனாதிபதி மகிந்தவின் ஆளும் கட்சி நாட்டின் மற்ற பாகங்களில் வெற்றியீட்டியுள்ளமை இலங்கையின் இனங்களுக்கிடையிலான
வேறுபாட்டை தெளிவாகப் புலப்படுத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter