>> Saturday, August 14, 2010



டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

1986 ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் சில வழக்கறிஞர்கள், கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பி்ல் டக்ளஸ் தேவானந்தா ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்றும் அவரை போலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசையும் தமிழக அரசையும் கேட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் எதிர்மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வஜிரவேலு தமிழோசையிடம் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின் படி, தமிழ் ஆயுதக்குழுவினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தமிழோசையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter