>> Friday, August 27, 2010



இலங்கை வளர்ச்சித்திட்டம் குறித்த கூட்டம்


50,000 வீடுகளை இந்தியா கட்டித்தரும்

இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இருநாட்டுப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று டெல்லியில் நடைபெற்றது.

இலங்கை அரசின் சார்பில், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்தியக் குழுவில், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தியா வந்தபோது, இலங்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 புதிய வீடுகளைக் கட்டித் தருதல், ரயில்வே, விமானத் தளம் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி அளித்தல், விவசாய முன்னேற்றத்துக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்காக, இந்தியா ஏற்கனவே சில உதவிகளையும் வழங்கியிருக்கிறது.


இடம்பெயர்ந்த ஒரு பெண்

இந்த நிலையில், அந்தப் பணிகள் தொடர்பாக இந்தியக் குழுவினரிடம் இலங்கைப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தார்கள். பணிகளின் தற்போதைய நிலவரம், அவற்றுக்குத் தேவைப்படும் அடுத்தகட்ட உதவிகள் உள்ளிட்ட விவரங்களை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதையடுத்து, இந்தியத் தரப்பில் அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்கள் விரைவில் இலங்கை சென்று, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட உள்ள நிலையில், அப்போது அத்திட்டங்கள் தொடர்பாக அடுத்தகட்டமாக விவாதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் மாலை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் போர் முடிவடைந்து நிவாரணத் திட்டங்களுக்காக இந்தியா அறிவித்துள்ள உதவிகளை இலங்கை எந்த வகையில் பயன்படுத்தி வருகிறது என்பது தொடர்பாக, பிரணாப் முகர்ஜியிடம் பஸில் ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு விவரங்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தேவைப்படும் நிதி உதவிகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter