>> Wednesday, May 16, 2012

ஆ ராசா சிறையிலிருந்து விடுதலையானார் 2ஜி எனப்படும், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்.. ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, 20 லட்சம் ரூபாய் உத்தரவாதத் தொகையாக ராசா செலுத்த வேண்டும் என்றும், அதே அளவு தொகைக்கு மேலும் இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதன் மூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் கடைசியாக ஜாமீன் பெறும் நபர் ராசா என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் நீதிமன்ற உத்தரவு கிடைத்த்தும், அதுதொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 7 மணியளவில் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ராசாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அவர், நீதிமன்ற அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாது. அதேபோல், தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. சாட்சிகளைக் கலைப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவர் தனது பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ள காலம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதும் எந்தப் பலனும் விளையப் போவதில்லை என்று கருதி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்தார். ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் சாட்சகளைக் கலைத்துவிடுவார் என்ற சிபிஐ வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார். ராசாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த விடயங்களை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருப்பாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், ஏறத்தாழ எல்லா சாட்சிகள் மற்றும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன என்றும் நீதிபது தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். ராசாவுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அறிவித்தவுடன், நீதிமன்றத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், ஆரவாரமாகக் கூச்சலிட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ராசாவை வாழ்த்தி நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்படும் வரை காத்திருந்த ராசா, கடந்த வாரம்தான் தனது ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த பெஹூராவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அரசு ஊழியரையும் மற்றவர்களையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பதை ராசா தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ராசா மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராசாவும் இன்னும் சிலரும், தங்கள் கண்காணிப்பில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருப்பது புதிய விசாரணையில்தான் தெரியவந்ததாகவும் அதுபற்றி மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என்றும் சிபிஐ தெரிவித்தது. இதனிடையே, ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது வழக்கு விசாரணையை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Read more...

புனிதப் பயணத்துக்கான தமிழக அரசின் மானியம் சரியா? தமிழகத்திலிருந்து இந்துக்கள் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகியத் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த மானிய உதவியை வழங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மானசரோவர் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் மொத்த செல்வான ஒரு லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜெரூசலத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த 500 கிறிஸ்துவர்களுக்கும் இது போன்ற மானியம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு சரியானது அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞருமான சி எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter