>> Tuesday, November 30, 2010

விக்கிலீக்ஸில் அமெரிக்க ராஜாங்க ரகசியங்கள்


விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க ராஜாங்க அலுவலர்கள் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களில் உள்ள முக்கிய சாரம்சங்களை பார்ப்போம்.

இரான் மீது தாக்குதல்

பல அரபு நாட்டு தலைவர்களும், அவர்களது பிரநிதிகளும் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். இரானின் சந்தேகத்துக்கு உரிய அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தவே இந்த தாக்குதல் கோரிக்கை.

ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் இருக்கும் சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைர், சவுதி மன்னர் அப்துல்லா, அடிக்கடி அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.


சவுதி மன்னர் அப்துல்லா

அமெரிக்கா ‘பாம்பின் தலையை வெட்ட வேண்டும்’ என்று மன்னர் விரும்புவதாக அல் ஜுபைர் கூறுகிறார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சரோ, தெஹ்ரான் மீது தீவிரமான தடைகளை விதிக்க வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார்.

பஹ்ரைனின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபாவுக்கும் அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரயஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ‘எப்படியாவது’ இரானின் அணு திட்டத்தை நிறுத்துமாறு மன்னர் கூறியுள்ளார்.

ஐ.நாவில் வேவு பார்ப்பது

அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டனின் அவர்களின் பெயரில் அனைத்து ராஜாங்க அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டுள்ள ரகசிய செய்தியில், ஐ.நாவில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் உயிரியில் தகவல்களான, மரபணு, கைரேகை போன்றவற்றை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

துணை செயலர்கள், விசேஷ அமைப்புகளின் தலைவர்கள், பிரதான ஆலோசனையாளர்கள், தலைமை செயலரின் முக்கியமான செயலர்கள், அமைதி படையினரின் தலைவர்கள், இராணுவ தலைவர்களின் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்க சொல்லப்பட்டுள்ளது.

அதே போன்று கிரெடிட் கார்ட், மின்னஞ்சல் முகவரிகள், ரகசிய எண்கள், பெயர்கள், கணிணீ வலைகளுக்கான ரகசிய குறியீடுகள் போன்றவற்றை சேகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற ஒன்பது ரகசிய உத்தரவுகள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் கொண்டலீசா ரைஸின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் மீதான கருத்து

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணியை ரோமில் உள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரி ஒருவர், பொறுப்பற்ற, சுயதம்பட்டம் அடிக்கும் நவீன ஐரோப்பாவுக்கு பிரயோஜனமில்லாத தலைவர் என்று வர்ணித்துள்ளார்.

அதே போன்று ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சாலா மெர்கல் அவர்களை எவ்விதமான கற்பனா திறன் இல்லாத தலைவர் என்றும், லிபிய தலைவர் கர்னல் கடாபி ஒரு உக்ரைன் பேரழகியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


'தடுமாறி கொண்டிருக்கும் பெருசு' - அமெரிக்கா

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் அவர்களை தடுமாறி கொண்டிருக்கும் பெருசு என்று வர்ணித்துள்ள ராஜாங்க அதிகாரிகள் இரான் அதிபர் மஹமூது அஹெமெதிநிஜாத் அவர்களை ‘ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக தலைவர்களை இவ்வாறு கிண்டலடிக்கும் தொனியில் ராஜாங்க அதிகாரிகள் தகவல்களை அனுப்பியிருந்தாலும், இவற்றால் எல்லாம் ராஜாங்க உறவுகள் பாதிக்காது என்று பிபிசியின் ராஜாங்க ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

இதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள ரகசிய செய்தி ஒன்றில், பாகிஸ்தானின் அணுசக்தி உலைகளில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளையும், அவற்றை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது கொண்டுள்ள கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்று மிகவும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பாகிஸ்தானில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளியேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதவும் தெரிய வந்துள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அஸாங்கே

இது போன்ற தகவல்கள் ராஜாங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அஸாங்கே, அரபு செய்தியாளர்களிடம் வீடியோ மூலம் ரகசிய செய்தி கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.

Read more...

>> Monday, November 29, 2010


கிருஷ்ணா தமிழ் பிரதிநிதிகளை சந்திக்க வில்லை


எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மகிந்த


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது மூன்று நாள் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா சிறுபான்மை சமூக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என எதி்ர்பார்க்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற விடயங்கள், அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தம்முடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள முக்கிய அரசியல் சூழ்நிலையில், இந்திய உயர்மட்ட அமைச்சர் ஒருவர் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்காது விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் விடயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் கலாநிதி கீதபொன்கலன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுக்கின்றமையை உணர்ந்த இந்தியா, தனது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்த முனையும் நடவடிக்கையாகவும் இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தை பார்க்க முடியுமெனவும் கீதபொன்கலன் கருத்து தெரிவித்தார்.

Read more...

>> Saturday, November 27, 2010


ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்


இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில், தொலை தொடர்புத்துறையில் 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொலை தொடர்புத்துறைச் செயலர் ஆகியோரிடம், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தத் தவறியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவிசி எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிஏஜி எனப்படும் இந்தியக் கணக்குத் தணிக்கை ஆணையம் ஆகிய இரு முக்கிய விசாரணை அமைப்புக்களும், இந்த முறைகேட்டில் அமைச்சர் மற்றும் செயலருக்கு உள்ள தொடர்புகள் குறித்து கடுமையாகக் கண்டித்திருந்த போதிலும், புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

எந்த ஒரு பொறுப்பான நபரும், அமைச்சர் மற்றும் செயலரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துவார்கள். ஆனால், 8 ஆயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறும் புலனாய்வுத்துறை, அந்த இருவரிடமும் விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிக் கேட்டார்கள்.

அதற்கான தாமதம் குறித்து, மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், புலனாய்வுத்துறைக்கென தனியான விசாரணை நடைமுறை உள்ளதாகத் தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை கடைடிபிக்கப்படவில்லை என்றும், அதனால் அரசுக்கு உத்தேசமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழ்பபு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முடக்கம்

இதனிடையே, ஆ. ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.

இதனால், வியாழக்கிழமை தொடர்ந்து 10-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

Read more...


இந்தியா கபடியில் இம்முறையும் தங்கம்


1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
சீனாவின் குவாங் ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணியினர் தங்கப் பதக்கம் வென்றார்கள்.

ஆடவர் கபடி அணியினர், 38 க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில், ஈரான் அணியைத் தோற்கடித்தனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 1990-ம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று வருகிறது.

இந்திய மகளிர் அணியினர், 28-க்கு 14 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றார்கள்.

400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இந்திய மகளிர் பிரிவினர் தங்கப்பதக்கம் வென்றார்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே அணி தங்கம் வென்றது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் அந்த அணி தங்கம் வென்றது.

குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தான் வீரர் அடோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி 14 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 64 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

சீனா முதலிடத்திலும், தென்கொரியா, ஜப்பான் அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டி-20 கிரிக்கெட் போட்டிகளில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

Read more...


அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில்


மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அந்நாட்டின் இரண்டு புதிய துணைத் தூதரகங்களை இலங்கையில் திறந்துவைக்கவுள்ளார்.

தென்னிலங்கை துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டையிலும் வடக்கே யாழ்ப்பாணத்திலும் இந்த துணைத் தூதரகங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.

மூன்று நாள் விஜயமாக வியாழன்று மாலை இலங்கை சென்றடைந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்,இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பலரையும் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.

வெள்ளியன்று காலை ஜீ.எல்.பீரி்ஸூடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், போர் ஓய்ந்துள்ள இலங்கையில் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சந்தப்பர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற எந்தவொரு விடயங்களையும் புரிந்துணர்வுடனும் ஒழுங்கமைந்த பேச்சுவார்த்தைகளூடாகவும் தீர்த்துக்கொள்ள முடியுமென நம்புவதாகவும் கிருஷ்ணா சுட்டிக்காட்டினார்.

பிராந்திய பலப்பரீட்சை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததன் பின்னர் அந்நாட்டுடனான இந்திய இராஜதந்திர உறவுகளின் ஒரு அங்கமாக தனது துணைத் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசியாவில் பாகிஸ்தான்,பங்களதேஷ் போன்ற நாடுகளில் சீனாவின் அனுசரணையில்அமைந்துள்ள பல துறைமுகங்களுக்குப் புறம்பாக இலங்கையில் ஹம்பாந்தோட்டை நகரில் அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகத்திற்கும் சீனாவே மொத்த நிதியுதவியும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
ஹம்பாந்தோட்டையில் சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
இதற்கிடையே தற்போது இந்தியா ஒன்று புள்ளி ஏழு பில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவிகள் அடுத்த மூன்று வருடகாலத்தில் யாழ்ப்பாணத்தில் துறைமுகமொன்றை நவீனமயப்படுத்தவும் மற்ற இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின் கருத்து தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் சரித்திர ரீதியாக இலங்கையுடன் இந்தளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வில்லை எனத்தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதாக மேற்குலக நாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரியும் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்கின்றார்.

Read more...

>> Friday, November 12, 2010


ராஜா பதவி விலகமாட்டார்: திமுக


புகாரில் சிக்கியுள்ள ராசா
இந்தியாவில் தொலைத்தொடர்பில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பதால் அந்தத் துறைக்கு பொறுப்பான திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆ ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என்று திமுக மீண்டும் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தில் அந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான டி கே எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமை கணக்காயர் அரசிடம் சமர்பித்துள்ள அறிக்கையிலும் இந்த விடயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், எதிர்கட்சிகள் தமது அரசியல் லாபத்துக்காக கொடுக்கும் அழுத்தங்களுக்கு தமது கட்சி பணியாது என்று இளங்கோவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார்--ஜெயலலிதா

இதற்கிடையே, ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினால் திமுக மத்திய ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற்றுக்கொள்ளும் என்று காங்கிரம் கவலைப்படத்தேவையில்லை என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தாம் தயார் என்றும், காங்கிரசுக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர முடியும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புவதாக ஜெயலலிதா சூசகமாக கோடிகாட்டி வந்தார். அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் சிலர் கூறிவந்தனர்.

இந்தப்பின்னணியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களுக்குள்ளாயிருக்கும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று அஇஅதிமுக் உட்பட பல எதிர்க்கட்சிகள் கோரிவந்தாலும், அவரை வெளியேற்ற் காங்கிரஸ் தயங்குகிறது, காரணம் அப்படிச் செய்தால் திமுக தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என அது அஞ்சுகிறது என்றும் கருத்துக்கள் உலாவந்தன.

அது குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, காங்கிரஸ் அவ்வாறு அஞ்சத்தேவையில்லை என்றும் திமுகவிற்கு நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அதை தன்னால் ஈடுகட்டமுடியும் என ஜெயல்லிதா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அஇஅதிமுகவிற்கு தற்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமல்ல, கூடுதலாகவே இன்னமும் ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவையும் தன்னால் காங்கிரசிற்கு பெற்றுத்தரமுடியும் என்று ஜெயலலிதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கூட்டணியில் மாற்றமில்லை--காங்கிரஸ்

அதேசமயம், ஜெயலலிதாவின் பேட்டி குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த கூட்டணியில் ஏதும் மாற்றமில்லை என்று கூறினார்.

Read more...


யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்


விசாரணை ஆணையம்


யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள்.

கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் யோகரட்ணம் யோகியின் மனைவி தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்.

அத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி ஆணைக்குழுவினரிடம் கோரியிருக்கின்றார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Read more...

>> Thursday, November 11, 2010


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை என செய்திகள்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற வைத்தியர்களை வந்து பணியாற்றுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

போர்ச்சூழல் காரணமாகவும், போர் நடைபெற்ற காலங்களில் யாழ் குடாநாடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து தரைவழித் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்ததனாலும், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும், அநேகமான வைத்தியர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. அல்லது அத்தகைய நியமனங்களை ரத்து செய்துவிட்டு அவர்கள் வெளிமாவட்டங்களில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதனால் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை யாழ் மாவட்டத்தில் பல வருடங்களாகத் தொடர்ந்து நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறான விண்ணப்பங்களுக்கு இடம் மாற்ற உத்தரவு சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் என சுகாதார அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டு அதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையையும். யாழ் மாவட்டத்தின் இன்றைய நிலைமைகளையும் கருத்திற்கொண்டு, தற்போது வெளிமாவட்டங்களில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர்களை யாழ் மாவட்டத்திற்குத் திரும்பி வருமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

Read more...


தொண்டு நிறுவனங்களுக்கு "கிடுக்கிப்பிடி"


வடபகுதியில் பெருமளவில் உதவி தேவைப்படும் நிலை உள்ளது
இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

அப்படியான சந்தேகம் ஏன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உருவாகியுள்ளது என்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறை இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்கட்டுமான நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என இலங்கையின் கிழக்கே செயற்பட்டு வரும் உள்ளூர் அரச சார்பற்ற தன்னர்வ தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவரான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவினரால் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளை மீண்டும் நினைவூட்டுவதாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறுகிறார்.

அரசின் இந்தச் செயற்பாடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே ஒரு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது எனவும் கமலதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசால் மட்டுமே உதவிகளையும் முன்னேற்றங்களியும் செய்ய முடியாது

இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மீள்கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தேவையான முன்னெடுப்புகளை செய்ய அரசால் மட்டும் முடியாது எனவும் கமலதாஸ் கூறுகிறார்.


நிதி வரும் போது வேகமான அபிவிருத்தி வரும், நிதிகள் மட்டுப்படுத்தபடும் போது அல்லது பணியாளர்கள் மட்டுப்படுத்தப்படும் போது, உதவி தேவைப்படும் பிரதேசம் வளராமல் போய்விடலாம்


வர்ணகுலசிங்கம் கமலதாஸ்

தொண்டு நிறுவனங்கள் இப்படியான பணிகளில் ஈடுபடும் போது, அந்தப் பணிகளுக்கான நிதியுதவி பல்தரப்பிலிருந்து கூடுதலாக கிடைக்கும் எனவும், அது தடைபடும் போது நிவாரண மற்றும் முன்னேற்றப் பணிகள் தடைபடும் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளை சர்வதேசத்திடமிருந்து பெறும் வல்லமை அரசுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

நாடாளுமன்றம் ஒதுக்கும் நிதியிலிருந்தே அரசு உதவி தேவைப்படும் மக்களுக்கு அதை செய்து வருகிறது எனவும் கூறுகிறார் கமலதாஸ்.

Read more...

>> Tuesday, November 2, 2010



'போதை மருந்தைவிட மது மோசம்'


சமூக மட்டத்தில் மதுவின் பாதகந்தான் அதிகம்
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.
போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது.

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.



சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன.

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது.

இந்தத அறிக்கையை தயாரித்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் போதைப்பொருள் குறித்த முன்னாள் ஆலோசகரான பேராசிரியர் டேவிட் நட். போதைப்பொருள் குறித்த கொள்கைகள் பற்றிய வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரிட்டனில் போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் காலாவதியானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை அரச கொள்கையாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுபவர்கள் இந்த ஆய்வு ஒரு போலி விஞ்ஞானம் என்று விபரிக்கிறார்கள். அந்த போதைப் பொருட்களின் பட்டியலில் இருப்பவற்றில் மது மாத்திரமே சட்டபூர்வமான போதை மருந்து என்பதால், அது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற முடிவில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் கூட இந்த ஆய்வின் முடிவு குறித்து திருப்தி அடையவில்லை.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து மேலும் விவாதங்கள் தொடர்வதற்கு தற்போதைய விவாதம் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனை விட அரைவாசியளவுக்கே மது அருந்தப்படுகின்ற ஸ்வீடன் போன்ற நாடுகளிடம் இருந்து பிரிட்டன் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன.

அரசாங்கம் இந்த விடயத்தில் புதுமையான அணுகுமுறையை கைக்கொண்டால் தான் அது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Read more...


'ஒச்சாயி' -தொடரும் வரிவிலக்கு சர்ச்சை


ஒச்சாயி படத்தின் காட்சி
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் இல்லை, கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
‘ஒச்சாயி’ என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முதலில் தமிழக அரசு மறுத்தது. அது தமிழ்ச்சொல் அல்ல என்று சம்பந்தப்பட்ட குழுவினர் நினைப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒச்சாயி என்பது பரவலாக மதுரைப் பகுதியில் பல பெண்களுக்கு இருக்கும் பெயர், ஆங்கிலம் கலந்த சொற்களைப் பெயர்களாகக் கொண்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் தமிழக அரசு ஒச்சாயிக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது உள்நோக்கமுடையது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப்படத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது என்ற முடிவின் படி தான் ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இறுதி முடிவெடுப்பதே தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழுதான் என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இப்பிரச்சினை பற்றி கருத்துக்கூறிய வளர்ந்துவரும் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், 'இப்படியெல்லாம் செய்வதால் தமிழ் வளர்ந்து விடும் என்று நினைப்பதே தவறு, பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிப்பதில்லை, தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அக்குழுவின் பார்வையில் எத்தகைய திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு இசைவாக இருப்பதாக கருதப்படுகிறதோ அவற்றிற்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைய வேண்டும்' என்றார்.

Read more...


இன்றளவும் தொடரும் அவலம்


மனித மலம் வெற்றுக் கையால் அள்ளப்படுகின்றது
மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்னமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறும் தலித் சமூகத்தினர் அதை முற்றாக ஒழிக்கக்கோரி புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய தலைநகர் தில்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களை இந்த இழிவான பணியிலிருந்து மீட்குமாறு இந்திய நடுவணரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்தியாவில் மனித கழிவை மனிதர்கள் அள்ளும் நடைமுறை தேசிய அளவில் 1993ம் ஆண்டிலேயே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது தொடர்வதாக கூறுகிறார் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய தேசிய துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான, பெசவாடா வில்சன். இந்த இழிவை சுமப்பவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தின் மற்ற பகுதியினர் மத்தியில் இதை ஒழிப்பதில் அதிக அக்கறை இல்லை என்கிறார் அவர்.

எனவே, இந்திய அரசால் சட்டவிரோதமாக்கப்பட்ட மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகபட்ச அக்கறை காட்டி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இதை ஒழித்து இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட இந்த அவலம், இந்தியாவில் பரவலாக தொடர்வதை ஒப்புக்கொள்கிறார் இந்திய நடுவணரசின் ஓய்வு பெற்ற அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன். பழமையில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் மாற்றங்கள் மிகவும் தாமதமாகவே ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

Read more...

>> Monday, November 1, 2010



தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?


தமிழ் எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துருக்கள்

கணினியில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதற்கான யூனிகோட் ஒருங்குறி முறையில் 26 சமஸ்கிருத எழுத்துருக்களைச் சேர்க்க திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறை என்றும், அதில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிக்க "ஆரிய சக்திகள்" முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மணிவண்ணன் செவ்வி

இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழில் எழுதுவதற்கும் அந்த ஒருங்குறி முறை இப்போது பயன்படுத்தப்படுவதால் உலகளாவிய அளவில் அனைவரும் இணையத்தின் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடிகிறது, யூனிகோடில் தமிழ் எழுத்துக்களுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த ஜூலையில் சிறீ ரமண சர்மா என்பவர் தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் கோரியிருப்பதாகவும் அப்படிச்செய்தால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடுமென்றும், தமிழை சமஸ்கிருதமாக்கும் முயற்சியே இது என்றும், இத்தகைய சதிகள் வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது என்றும் வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கணித்தமிழ் நிபுணரின் கருத்து


கணித்தமிழ் நிபுணர் மணி மு மணிவண்ணன்
கணித்தமிழ் நிபுணர் மணி மு மணிவண்ணன்

தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்த சர்ச்சைகுறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வுரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

Read more...



தென்னாப்ரிக்க தமிழர்களின் 150 ஆண்டுகள்


டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு கொண்டுசென்றனர்.

1860 ஆம் ஆண்டு துவங்கி 1911 வரை இப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இன்றைய நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென் ஆப்ரிக்காவில் தற்போது வாழ்கின்றனர். அவர்களில் சுமார் பத்து லட்சம் பேர் தமிழர்கள் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த இந்திய வம்சாவளியினர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதன் நூற்றி ஐம்பதாவது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக நவம்பர் 29 ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் மிகப்பெரும் விழா ஒன்றை அவர்கள் நடத்த உள்ளனர். அதில் தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா கலந்துகொள்ள இருக்கிறார்.

தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் மற்றும் அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துணையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதியை அவர்கள் சந்தித்தனர்.

தென் ஆப்ரிக்காவில் நடக்க இருக்கும் 150 ஆம் ஆண்டு கொண்டாட் டங்களில் கலந்துகொள்ள தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்புமாறு கோரிய இந்த குழுவினர், தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக ரவிக்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ் கற்றுத்தர கோரிக்கை


இந்தியர்களின் கட்டடம்-1900களில்
இந்தியர்களின் கட்டடம்-1900களில்
தென்னாப்ரிக்காவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழைப் பேசவோ படிக்கவோ இயலாத நிலையில் இருந்தாலும் தமது குழந்தைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க விரும்புவதால் அதற்கு உதவும் வகையில் தமிழக அரசு தமிழ் பாடநூல்களையும், ஆசிரியர்களையும் அளித்து உதவ வேண்டும் என்று கோரியதாக ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும், தென்னாப்ரிக்காவில் தமிழர்கள் செறிந்து வாழும் டர்பன் நகரில் தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், தென்னாப்ரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஏதேனும் ஒன்றில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை தென்னாப்ரிக்காவில் அறிமுகப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு கலைஞர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக்வும் அவர் கூறினார்.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுப்பதாக கருணாநிதி உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Read more...


ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்


ரிஸானாவின் குடும்பத்தினர்(ஆவணப்படம்-2007)
ரிஸானாவின் குடும்பத்தினர் (ஆவணப்படம்-2007)
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை கிட்ட வேண்டுமெனக் கோரி பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் கிழக்கே மூதூர் சாபி நகரைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு கிட்ட வேண்டுமென மூதூர் பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை சவுதி அரேபியாவில் ரிஸானாவின் பராமரிப்பிலிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடமும் ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு கோரும் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவினையும் இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்தின் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த மக்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தையைக் கொன்றதாக ரிஸானா மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மட்டுமே ரிஸானாவின் விடுதலை சாத்தியமாகும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter