>> Saturday, January 30, 2010

சரத் பொன்சேகா
தமிழோசை
சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் - 13 பேர் கைது
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் அரச படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் அலுவலகம் அமைந்துள்ள வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழையாதபடி தடுத்த விசேட அதிரடிப் படையினர் அங்கு சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் நாற்பது அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலிசாராக குறைத்துள்ள அரச தரப்பு தற்போது தமது அலுவலகத்தை சோதனையிட்டு கணிணி உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தம்முடன் இருந்தவர்களையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இதுதொடர்பாக இலங்கை அரச அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டும் கூறினார். சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது பற்றியோ, எது குறித்து விசாணை நடத்தப்படுகிறது என்பது பற்றியோ ஹுலுகல்ல உறுதிப்படுத்தவில்லை.
இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் மீது விசாரணை
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர்நில பேரம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷுக்கு எதிராக, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில், மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய உயர் அதிகாரி ஒருவர் இத்தகயை நடவடிக்கையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாதம் 31-ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவச் செயலர் மீதான குற்றச்சாட்டை அடுத்து, முதலில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற ராணுவ அதிகாரிகள் மீது வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும்போது, ராணுவச் செயலர் அவதேஷ் பிரகாஷுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ராணுவத் தளபதியின் உத்தரவை நிராகரித்து, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சுக்னா ராணுவ நிலையம் அருகே அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்க, ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க, அவதேஷ் பிரகாஷ், மற்ற நான்கு ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்
இலா காந்தி- காந்தியின் பேத்தி1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் அஸ்தியை பல நாட்டு அரசுகளின் சார்பில் அவற்றின் தலைவர்கள் தத்தமது நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கொள்கையை கடைப்பிடித்த அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த அஸ்தியை அந்நாட்டு அரசாங்கம் பெற்றுக் கொள்ளாமையால் அங்குள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் காந்தியின் அஸ்தி அங்கே கொண்டுசெல்லப்பட்டது.
காந்தி தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவரது அஸ்தியின் ஒருபகுதியை அங்கே அனுப்புவதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. அப்படி கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி அவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அப்படி வைக்கப் பட்டிருந்தபோது, விலாஸ் மெஹதா என்கிற காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர் அந்த அஸ்தியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து காந்தியின் நினைவாக தம்மிடம் வைத்துக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் இந்த அஸ்தியை அவர் தமது மருமகளிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அஸ்தியை சில ஆண்டுகாலம் வைத்திருந்த அந்த மருமகள் அதனை காந்தி குடும்பத்திடம் கையளித்துள்ளார்.
காந்தியின் அஸ்தியை கண்காட்சியிலோ அல்லது தனிநபர்களிடமோ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதை கடலில் கரைப்பது தான் சரி என்றும் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை அஸ்தி கடலில் கரைக்கப்படவுள்ளது.
தென் ஆப்ரிக்க கடற்படையின் வாகனத்தில் அஸ்தியுடன் தாமும் உடன் சென்றுகடலில் கரைக்கவுள்ளதாகவும் இது முழுமையான அரசு மரியாதையுடன் செய்யப்பட இருப்பதாகவும் தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் பேத்தியான இலா காந்தி தமிழோசையிடம் கூறினார்.

Read more...

>> Friday, January 29, 2010


Read more...

வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியேற்க மாட்டார் என்கிறார் அமைச்சர்
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பை உடனடியாக செய்து கொள்ள வேண்டிய அவசரம் இல்லை என்று அரசின் மூத்த அமைச்சரான ஜி எல் பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
பதவியேற்பதற்கு உரிய காலம் வரும் போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மீண்டும் தேர்வாகியுள்ள மஹிந்த ராஜபக்ஷ எப்போது மீண்டும் பதவியேற்பார் என்கிற விடயம் இலங்கையில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜெனரல் சரத் ஃபொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷ்மண் ஹுலுகல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் வன்முறை
தேர்தலுக்கு பின்னர் வன்முறை தாக்குதலுக்கு உள்ளான ஒரு வாகனம்இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாநகர மேயர் அதிகாரபூர்வ இல்லத்தில் கைக்குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதுவன்றி அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதும் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதே போல ஓட்டமாவடி பகுதியிலும், காத்தான்குடி பகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் இல்லங்கள் மீதும் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலில் தோல்வியடைந்த பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் முகவராக பணியாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவரது வியாபார நிறுவனம் ஏறாவூர் பகுதியில் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.
இந்த சம்பவங்களுக்கு ஆளும் கட்சியே காரணம் என்று கூறப்படுவதை அவர்கள் மறுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
ஜனாதிபதி தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா
அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் ஃபொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
தமிழ் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த "துரோகம்" காரணம் எனவும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.
மேலும் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மஹிந்தவின் வெற்றிக்கான காரணங்கள் என்ன-ஆய்வு
யுத்த வெற்றியே மஹிந்தவின் தேர்தல் வெற்றிக்கு காரணம்-ஆய்வாளர் கீத பொன்கலன்ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது அவரது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவரது தலைமையிலான அரசு வெற்றி பெற்றது அவரது தேர்தல் வெற்றிக்கு ஒரு பிரதான காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். அதுமட்டமல்லாமல் யுத்த வெற்றியின் காரணமாக எதிர் கட்சிகளுடைய வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே வி பி யின் வாக்கு வங்கி பலவீனமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வெற்றி அவருக்கு கிட்டியுள்ளது என்று தான் கருதுவதாகவும் பேராதனை பல்கலைகழகத்தின் அரசியில் துறையின் தலைவரான பேராசிரியர் பொன்கலன் தெரிவிக்கிறார்.
பொதுவாக சிறுபான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக எடுக்கும் நிலைப்பாட்டையே இந்த முறையும் எடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு பகுதியில் சரத் ஃபொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
சரத் ஃபொன்சேகாவுக்கு கிடைத்த வாக்குகள் அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவும் கருத முடியும் என்றும் பேராசிரியர் பொன்கலன் கருத்து வெளியிடுகிறார்.
தற்போதைய சூழலில் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் செய்யப்படுவதற்கான அவசியம் இல்லை என அரசாங்கம் கருதவும் வாய்ப்பு இருக்கிறது எனறு தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்

Read more...

>> Thursday, January 28, 2010

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.
நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.
விடுதியில் முற்றுகை
முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.
இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.
விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.
விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

Read more...

>> Wednesday, January 27, 2010

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணும் பணி துவங்கியுள்ளது. முடிவுகள் புதன் மதியம் அளவில் தெரியவரும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளதன் பின்னர் அங்கு நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தலைநகர் கொழும்பிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பெருமளவான மக்கள் திரண்டுவந்து வாக்களித்துள்ளனர்.
வாக்குப் பதிவை ஒட்டி தலைநகர் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார்.
ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம் தேசிய அளவில் பார்க்கையில் 71 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றாலும் தமிழர்கள் அதிகம் வாழும் வட பகுதியில் வாக்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது என சுயாதீன கண்காணிப்புக் குழு ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .
யாழ்ப்பாணத்தில் குண்டுவெடிப்பு
யாழ்பாபாணத்தில் திங்கள் இரவும், செவ்வாய் அதிகாலையும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும். இது பொதுமக்களை பெரிய அளவில் அச்சுறுத்தியதாகவும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடக்கே வாக்களிப்பு மந்தமாக இருந்ததுவட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .
யாழ்ப்பாணத்தில் இன்று குறைந்தது ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. நாட்டின் மையப் பகுதியிலும் தெற்கிலும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களிலும் சில கையெறி குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
வவூனியா முகாம்களில் உள்ளவர்களில் பலர் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததாகவும், சரியான ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரால் வாக்களிக்க முடியவில்லை என்று ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினரை வெற்றிக்கு இட்டுச்சென்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுமே முக்கியப் போட்டியாளர்களாக அமைந்துள்ளனர்.
சிறப்பு ஏற்பாடு
திருகோணமலை மாவட்டத்தில் சில வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவரப்பட்டன.

Read more...

>> Friday, January 22, 2010

Friday, January 22, 2010

வெரித்தாஸ் தமிழ் பணியின் நேயர் சந்திப்பு - 2010
வெரித்தாஸ் தமிழ் பணியின் நேயர் சந்திப்பு கடந்த 17 ஜனவரி 2010 அன்று தஞ்சையில் வெகு சிறப்பாக நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட நேயர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் சேரன் மிகவும் தாமதமாக வந்து கலந்து கொண்டது நேயர்கள் மத்தியில் ஒரு விதமான சலசலப்பினை ஏற்படுத்தியது. பொங்கல் விடுமுறை என்பதால் நேயர்கள் பயணம் செய்து வருவதிலும் சிரமப்பட்டனர். போட்டியில் வென்ற நேயர்களுக்கு பரிசுகளை வழங்கி நேயர்களை சிறப்பித்தனர்.

Read more...

ஐ.பி.எல்.: பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படாதது தொடர்பான சர்ச்சை வலுக்கிறது

ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இந்த ஆண்டுக்கான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாதது இந்தியா – பாகிஸ்தான் இடையில் கருத்து மோதல்களை மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாததற்கு, இந்திய அரசு மீது பாகிஸ்தான் பழிபோடுவது துரதிர்ஷ்டமானது, ஐ.பி.எல்.லுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்தும், அவர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாகவும் வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இவ்விவகாரம் பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வீரர்களை மட்டுமன்றி நாட்டையே அவமானப்படுத்திவிட்டதாகவும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட காரியம் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாததைக் கண்டித்து, அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழும் தங்கள் இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற் உள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக் கூடாது என்று அந்நாட்டில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



--------------------------------------------------------------------------------


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்


சிவசங்கர் மேனன்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றி வந்த எம்.கே. நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜே.என். தீட்ஷித் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அணுசக்தி ஆளுமை ஆணையத்தின் செயல்பாட்டுக் குழுவி்ன் தலைவராக செயல்படுவதும் பாதுகாப்பு ஆலோசகரின் முக்கியப் பணிகளில் ஒன்று.



--------------------------------------------------------------------------------


காஷ்மீரில் பிரி-பெய்ட் செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை நீக்கம்



இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் பிரி-பெய்ட் எனப்படும் பயன்பாட்டுக்கு முன்பு பணம் கட்டும் வகையிலான செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு இருந்த தடையை இந்திய அரசு நீக்கியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவை கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கே தடைசெய்யப்பட்டிருந்தது.

இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவைகளை கோரும் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை, தொலைபேசி நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தடை நீக்கத்தை இங்குள்ளவர்கள் வரவேற்பதாக காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அதேசமயம் கடந்த இரண்டு மாத காலமாக இது தொடர்பில் நிலவிய குழப்பமும், அது உருவாக்கிய அசவுகரியங்களும் இங்குள்ளவர்களை பெரிதும் கோபப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதித் தேர்தல்: வட மாகாண மக்களின் மனநிலை

போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றம் ஆகிவருகின்ற வட மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுவருகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வன்னி இளைஞர்கள் விவகாரம் இம்மக்களைப் பொறுத்தவரை இத்தேர்தலில் ஒரு முக்கிய விடயமாக எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் புனர்வாழ்வு பெறுவதில் பல பணிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மிகவும் அவசரப்பட்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாக வன்னி மக்கள் பலர் கருதுகின்றனர்.



--------------------------------------------------------------------------------


சவுதியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபட்ட இளவரசர் கைது


இளவரசர் பந்தர் பின் சுல்தான்
சவுதியரேபியாவை ஆளும் ராஜ குடும்பத்தின் மிக முக்கிய இளவரசர் ஒருவர், அங்கு மாதக் கணக்கில் வெளியில் பொதுவிடங்களில் தோன்றாமல் இருந்துவருவது, சவுதியரேபியாலோ அல்லது வேறு ஒரு அரபு நாட்டிலோ நடந்ததாகக் தெரிவிக்கப்படும் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்கிற ஓர் ஊகம் பரவச் செய்துள்ளது.

இளவரசர் பந்தர் பின் சுல்தான் சவுதியரேபியாவுடைய தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ஆவார். பல ஆண்டுகளாக சவுதி ராஜ்ஜியத்துடைய வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பாளராக இருந்தவந்தவர் இவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் முறியடிக்கப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அடுத்து இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களிலும், இணையதள கருத்து பரிமாற்ற மன்றங்களிலும் தற்போது செய்திகள் அடிபடுகின்றன.

இவரது தந்தையான பட்டத்து இளவரசர் சுல்தான் பலகாலம் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துவிட்டு நாடுதிரும்பியபோது அவருக்கு ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அளித்த வரவேற்பில்கூட பந்தர் பின் சுல்தான் இருந்திருக்கவில்லை என்பது பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.

மன்னர் அப்துல்லாவுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டமைக்காக வேறு மூன்று இராணுவத் தளபதிகளுடன், இளவரசர் பந்தர் பின் சுல்தானும் சிறையில் இருந்துவருகிறார் என சிலர் கூறுகின்றனர்.

சவுதியரேபியாவின் பிராந்திய வைரியாக விளங்கும் இரானின் முக்கிய கூட்டாளியான சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யும் சதி வேலைகளில் ஈடுபட்டமைக்காக இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

Read more...

>> Thursday, January 21, 2010

ஹெய்தி பூகம்பத்தில் இந்தியர் ஒருவர் பலி: ஹெய்திக்கான இந்திய தூதர் தகவல்

ஹெய்தி பூகம்பத்தில் இந்தியர் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளதாக ஹெய்திக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

ஹவானாவில் இருந்து செயல்படுகின்ற கியூபா, டொமினிகன் குடியரசு மற்றும் ஹெய்திக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் குழு நேற்று ஹெய்தி சென்று பூகம்பப் பாதிப்புகளை நேரில் பார்த்துத் திரும்பியுள்ளது.

ஹெய்தியில் வாழும் சுமார் 300 இந்தியப் பிரஜைகளில், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஐ.நா.வுக்காக ஒப்பந்தப் பணியாற்றும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என இந்தியத் தூதர் டாக்டர் மித்ரா வஷிஷ்ட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

பூகம்ப நிவாரண உதவியாக ஹெய்தி அரசாங்கத்திடம் ஐந்து மில்லியன் டாலர்களை இந்தியா ஏற்கனவே கையளித்துள்ளதாக இந்தியத் தூதர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் விரைவில் ஹெய்தி செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.


--------------------------------------------------------------------------------


இருபது ஆண்டுகளில் மிக அதிக முறைகேடுகள் நடக்கும் தேர்தல் இது: இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்கள்


கஃபே அமைப்பு இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்று
இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.

கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் 4 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்; இறந்தவர்களில் இருவர் எதிரணியைச் சேர்ந்தவர்கள்; மற்றைய இருவரும் அரசதரப்பு அணியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகளில் இதுவரையில் 39 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். 19 பேர் இந்த வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளுக்குச் செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது இடம்பெறாத அளவுக்கு முறைகேடுகளும், அத்துமீறல் சம்பவங்களும் இப்போது நடைபெற்றிருப்பதாகக் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நிலைமையானது, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதற்காகச் செயற்பட்டு வருகின்ற பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகக் கண்காணிப்பு அதிகாரி நீக்கம்

தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில், இலங்கையின் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியை இலங்கைத் தேர்தல் ஆணையர் உடனடியாக விலக்கிக்கொண்டுள்ளார்.

இந்த கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அதிகாரியான ஜெயம்பதி ஹெட்டியாராச்சி தமது பணிகளை முறையாக நிறைவேற்ற அரச ஊடகங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கூறினார்.

அரச ஊடகங்கள் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளைப் பின்பற்றாதது குறித்து தேர்தல் ஆணையர் ஏமாற்றமடைந்துள்ளார் என்று இந்த கூட்டத்துக்கு பின்னர் பிபிசியிடம் பேசிய எதிர்க்கட்சி வேட்பாளருக்காகப் பேசவல்ல அனுர குமார திஸ்ஸநாயக கூறினார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தல்: மலையக மக்களின் மனநிலை - விசேட பெட்டகம்




இலங்கையின் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பெற்ற பின்னர் அவர்கள் சந்திக்கின்ற மிக முக்கியத் தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதி தேர்தலும் ஒன்று.

பெரும்பான்மையானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அமைந்திருக்கின்ற இச்சமூகத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவர்களது வாக்குகளை பெறும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களும் மலையகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

மலையக மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு அவர்களின் இனப் பாதுகாப்புக்கான தீர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இம்மக்களில் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

Read more...

>> Wednesday, January 20, 2010

Read more...

Read more...

Read more...

ஓஷியானிக் கப்பலில் உள்ள தமிழ் அகதிகள் சிலருக்கு தஞ்சமளிக்க நியூசிலாந்து முடிவு


ஆஸ்திரேலிய கடற்பரப்பு-வரைபடம்
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் சுங்கத் துறைக்கு சொந்தமான ஒஷியானிக் வைக்கிங் கப்பலில் இந்தோநேஷியாவுக்கு அப்பால் கடலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் சிலருக்கு தஞ்சமளிப்பது குறித்து தாம் யோசித்து வருவதாக நீயுசிலாந்து அரசு கூறியுள்ளது.

ஐ நாவால் அகதிகள் அந்தஸ்த்து உறுதிசெய்யப்பட்ட 13 பேருக்கு, நீயுசிலாந்தின் வருடாந்த அகதிகள் ஒதுக்கீட்டின் கீழ் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவதற்காக பரிசீலிக்கப்படுவார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒஷியானிக் வைக்கிங்கில் இருந்து மீட்கப்பட்ட 78 தமிழர்களில் யாரையும் ஏற்க தான் விரும்பவில்லை என்று நீயுசிலாந்து அரசு தெரிவித்திருந்தது. தஞ்சமளிப்பதற்கான வரிசையை மீறி வருபவர்களை ஊக்குவிக்க தான் விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் என்றும் அது தெரிவித்துள்ளது.



--------------------------------------------------------------------------------


இலங்கையின் வடக்கு கிழக்கில் மூவினங்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்களும் ஒரே மேடையில்


த.தே.கூ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள்

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பிரதான தமிழ், முஸ்லிம்,சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தீர்மானித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் தற்போது அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது தங்கியிருக்கும் அக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழும் மத்திய முகாம் கிராமத்தில் நடை பெற்ற கூட்டமொன்றிலும் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினர்.

33 வருடங்களின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றிய இக் கூட்டத்தில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமுன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் உரையாற்றினர்.



--------------------------------------------------------------------------------


வங்கதேச பிரதமருடன் இந்திய தலைவர்களும் ஜோதி பாசுவுக்கு இறுதி மரியாதை


ஜோதி பாசுவின் இறுதி ஊர்வலம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்துவந்தவருமான ஜோதிபாசுவின் இறுதி யாத்திரை செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்றது.

95 வயதான ஜோதிபாசுவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்கள்.

அவரது உடல், சட்டப்பேரவைக் கட்டடத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்களும் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர், ஜோதிபாசுவின் விருப்பப்படி மதச்சடங்ககுள் ஏதும் செய்யாமல் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



--------------------------------------------------------------------------------


திருமணத்திற்கு முன்னரான உடலுறவு பற்றி நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்களில் குற்றமில்லையென கூறமுடியாது - இந்திய உச்ச நீதிமன்றம்


நடிகை குஷ்பு - ஆவணப்படம்
திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழ் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து, குற்றமில்லை என்று சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எந்தச் சூழ்நிலையில், எத்தகைய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்புவுக்கு தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

இந்தியாவில் மாறிவரும் உடலுறவுப் பழக்கங்கள் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பத்திரிக்கைக்கு நடிகை குஷ்பு பேட்டியளித்திருந்தார்.

அதில், பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அவ்வாறு உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், படிப்பறிவுள்ள ஓர் ஆண்மகன், தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், குறறச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி, குஷ்புவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி 6 மாதங்களில் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதை எதிர்த்து நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அத்தகைய கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு தனது மனுவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.

Read more...

>> Tuesday, January 19, 2010

Read more...

Read more...

Read more...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - தமிழ்பேசும் மக்களின் மனநிலை


வவுனியா முகாம்களில் உள்ள மக்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்றது. இந்த நிலையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வவுனியா பிரதேசத்தில் போதிய அளவில் சூடு பிடித்ததாகத் தெரியவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்கள் முழு அளவில் நடைபெற இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில், இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.


சரத் பொன்சேகா
சிலர் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், தேர்தலில் முன்னணியில் உள்ள இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதனால் தமக்கு என்ன பயன் விளையப்போகின்றது என்பதில் சிலர் பெரும் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் கருதுகின்றார்கள்.


மகிந்த ராஜபக்ஸ
இடம்பெயர்ந்துள்ள தங்களின் நலன்களைக் கவனிப்பதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.




--------------------------------------------------------------------------------


ஹைட்டியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பாதகமான நிலமைகளை ஏற்படுத்தும்- ஐ.நா எச்சரிக்கை


ஹைட்டி மக்களுக்கு உணவு விநியோகம்
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டியில் மோசமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருவது அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான உதவிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

எரிபொருள் இல்லையென்றால் சாலைகள் வழியாக நிவாரணப் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது என்பதோடு, மின்சாரம் இல்லையென்றால் செல்லிட தொலைபேசி வலையமைப்புகள் கூட வேலை செய்யாது என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

பூகம்பத்தில் வீடிழந்த மக்களிடம் கூடாரத் துணிகளை விநியோகிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றும், தேவைப்படும் விசேட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

ஹைதியிலும் அண்டையிலுள்ள டொமினிகன் குடியரசிலும் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக ஐ.நா. கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


"சென்னை உயர்நீதிமன்ற வளாக மோதல் குறித்த சீ.பி.ஐயின் குற்றப் பத்திரிகைகளை ஏற்கக்கூடாது" - வழக்கறிஞர்கள் மனு


பொலிசார்- வழக்கறிஞர்கள் மோதலின் போது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடந்த மோதல்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளை சென்னை கூடுதல் பெருநகர மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனக்கோரி வழக்கறிஞர்கள் மனுச் செய்திருக்கின்றனர்.

31 வழக்கறிஞர்கள், மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் மீது கலவரத்தில் ஈடுபடுவது குறித்த பல்வேறு இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குக்கள் தொடர்ந்திருக்கும் சி.பி.ஐ யின் இரு குற்றப்பத்திரிகைகளில், 6 காவல்துறையினரின் பெயர்கள் மட்டுமே காணப்படுகிறது.

மேலும் 22 காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சி.பி.ஐ சிபாரிசு செய்திருந்தாலும் கூட, வழக்கு 6 பேர் மீதுதான். அது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்கின்றனர் வழக்கறிஞர்கள்.



--------------------------------------------------------------------------------

Read more...

>> Monday, January 18, 2010

Read more...

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு அவர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார்.

95 வயதான ஜோதிபாசு, நிமோனியா காய்ச்சல் காரணமாக, இந்த மாதம் முதல் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிறு காலை 11 மணி 47 நிமிடங்களுக்கு அவரது உயிர் பிரிந்தது

ஜோதிபாசு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார். செவ்வாய்கிழமை இறுதியாத்திரைக்குப் பிறகு, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அவரது சடலம் ஒப்படைக்கப்படும்.

இந்திய அரசியலிலும், இடதுசாரிக் கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்த ஜோதிபாசு, 1977-ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகள் தொடர்ந்து மேற்குவங்க மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம், நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்திய அரசியலில் எளிமையான, தன்னலமற்ற தலைவர்களாகக் கருதப்பட்ட ஜோதிபாசு, ரஷ்யப் புரட்சிக்கு முன்பு பிறந்து இதுவரை உயிரோடு இருந்த கடைசி கம்யூனிஸ்ட் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.



--------------------------------------------------------------------------------


டப்ளின் விசாரணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது


விசாரணை குழு பார்வையாளர்கள்

இலங்கையில் கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடத்திய டப்ளின் விசாரணைக் குழுவொன்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பை சுமத்தியுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் விசாரணைக்காக கூடிய டப்ளின் போர்க்குற்றங்கள் தொடர்பான நியாயசபை இந்த தீர்மானத்தை இறுதியாக வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள இந்ந விசாரணைக்குழு இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதமாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நியாய சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.



--------------------------------------------------------------------------------


ஹெய்ட்டி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் பெரும் பாதிப்பு


நிலநடுக்கத்தினால் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன



ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட மையபுள்ளியில் இருந்து வரும் தகவல்கள், தலைநகரை விட இந்த பகுதியில் பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன என பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் போர்த் ஒ பிரான்ஸ்க்கு மேற்கே இருக்கின்ற லேகோனில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு இருக்கின்ற கட்டிடங்கள் அனைத்துமே நாசமாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஐ.நா வின் கணக்குப்படி இந்த நகரத்தில் 80 முதல் 90 சதவீத கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்த நகரத்தில் தப்பி உயிர்பிழைத்த மக்கள் அருகில் இருக்கின்ற கரும்பு தோட்டங்கள் அல்லது சதுப்புநில காடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் மார்க் டோயல் கூறுகின்றார்.

இதே நேரத்தில் தலைநகர் போர்த் ஒ பிரான்ஸில் அமைப்புகளிடம் இருந்து உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களிடம் ஒரு விதமான பதற்ற நிலை காணப்படுகிறது.

இப்போது ஆக்ஸ்பாம், ஐ,நா போன்றவை உணவு மற்றும் குடிநீரை விநியோகித்து வருகின்றன. மக்களுக்கு தற்போது சென்று சேரும் உதவிப்பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும், குறைந்தப்பட்சம் இதுவாவது தற்போது நடக்கிறதே என்ற நிறைவு காணப்படுவதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

செவ்வாய்கிழமையன்று ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 50,000 முதல் 1 லட்சம் பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஹெய்ட்டி பிரதமரோ, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தப்பட்சம் ஒரு லட்சம் பேராவது பலியாகிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Read more...

>> Monday, January 4, 2010


photo

Read more...

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சரத் பொன்சேகா

இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள், நாட்டில் தற்போது உள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா அவர்கள் ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை உடையவர்களாக, இன, மத, குல வேறுபாடின்றி பாதுகாப்பாக வாழ்வதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதாக அவர் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

புதிய ஆட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் 2000 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கவும், இராணுவம் பொலிசார் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் சமத்துவமான முறையில் ஊழலற்ற வகையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா அவர்கள் உறுதியளித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த தே கூ முடிவில் தொடர்ந்து தாமதம்


த.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை

இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தத் தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காமலேயே உள்ளனர்.

" இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில், ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்களா என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது" என்று தான் கருதுவதாக இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று அவர்களிடம் இருக்கும் குழப்ப நிலை மக்களிடையேயும் உள்ளது என்றும் கூறும் அவர், தமிழ் மக்களின் உணர்வலைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதிபலிப்பதா அல்லது அவர்களுடைய முடிவை வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் கூறுகிறார்.

தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களோ அல்லது அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அந்த விவாதங்களின் தகவல்களை இதுவரை முழுமையாக வெளியிடாததும் தமிழ் மக்களிடையே எந்த வகையான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரிய யுவி தங்கராஜா தெரிவிக்கிறார்.



--------------------------------------------------------------------------------


திருகோணமலை மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்


'தடைகள்' நீக்கம்

திருகோணமலை பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின்னர் பிரதேச மீனவர்கள் கடலுக்குச் சென்று சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையானது தங்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக இந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் இத்தகைய தடைநீக்கம் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய தடை நீக்கமானது கடந்த காலங்களைப் போல் அல்லாது மீனவர்களுக்குப் பாதுகாப்பை வழஙகியுள்ளது என்று அப்பகுதியின் மீனவர்கள் கூறுகிறார்கள்.

கடலில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் கடற்பிரதேசத்தின்
எந்தப் பகுதியிலும் கரையேறலாம் என்கிற வசதி தற்போது உள்ளது என்கிறார் மற்றும் ஒரு மீனவர்.

கடல் வலயத் தடை நீக்கப்பட்டதன் விளைவாக நிறைய மீன்
பிடிக்கப்படும் என்றும் இதன்மூலம் எதிர்காலத்தில் பாவனையாளாகள்
குறைந்த விலையில் மீனை வாங்க முடியும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் உள்ளுர் மீன் வியாபாரி ஒருவர்.

இத்தகைய தடைநீக்கமானது மீனவர்களின் பொருளாதார
செயற்பாடுகளை மேம்படுத்த உதவலாம் எனவும் மீனவர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter