>> Tuesday, July 20, 2010



அலன் சாண்ட்றேக்

நூலாசிரியர் சிங்கப்பூரில் கைது




சிங்கப்பூர் அரசாங்கம் மரண தண்டனையை பயன்படுத்தும் விதம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டரை வருடங்கள் வரை சிறைத் தண்டனைக்கு வழி செய்யும் குற்றவியல் அவதூறு குறித்த புலன்விசாரணையின் ஒருபகுதியாக 75 வயதான அலன் சாண்ட்றேக் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனது புத்தகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் சிங்கப்பூர் சென்றால் அங்கு தனக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

தாம் அவரது புத்தகத்தை தடை செய்யவில்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசாங்கம், ஆனால், புலன்விசாரணைகள் நடப்பதாகக் கூறியுள்ளது.

''Once A Jolly Hangman: Singapore Justice in the Dock'' என்பது அலன் சாண்ட்றேக்கின் புத்தகத்தின் பெயராகும்.

பல வருடங்களாக சிங்கப்பூரில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவராக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள தார்சன் சிங் என்பவரது செவ்வியையும் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பேட்டிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், அது சிங்கப்பூரின் நீதித்துறையின் பக்கசார்பின்மை, நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் அலுவலகம் கூறுகிறது.



ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக காவல்துறையினரால் கூறப்படுகின்ற குற்றவியல் அவதூறு புலனாய்வுகளுடன், நீதிமன்ற அவமரியாதை குறித்த குற்றச்சாட்டுக்களையும் இணைக்க சட்டமா அதிபர் அலுவலகம் விரும்புகிறது.

அந்தப் புத்தகம் தடை செய்யப்படவில்லை என்றும், ஆனால், அதனை வைத்திருக்காதீர்கள் என்று கடைக்காரர்களிடம் சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது என்றும் கடந்த வாரம் அரசாங்கம் பிபிசியிடம் கூறியிருந்தது.

கொலை, தேசத்துரோகம், போதை மருந்து கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது சிங்கப்பூரில் கட்டாயமானதாகும்.

குற்றங்களின் வீதத்தை குறைவாகப் பேணுவதற்கு அது மிகவும் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு குற்றவியல் அவதூறு சட்டம் பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இதேவேளை பிறிதொரு நிகழ்வாக சிங்கப்பூர் அரசாங்கம், உள்ளூர் படத்தயாரிப்பாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பற்றிய படத்தை தடை செய்துள்ளது.

அந்தப்படம் பொதுமக்களின் பார்வைக்கு உகந்ததல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது.

சிறிய ஆனால் செல்வந்த நாடான சிங்கப்பூரின் அரசாங்கம் தனது அரசியல் கட்டுப்பாட்டை கடுமைப்படுத்த சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பதற்கு இது தற்போது நிகழ்ந்துள்ள ஒரு புதிய உதாரணம் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

முன்னாள் அரசியல் தடுப்புக் கைதியான Lim Hock Siew அவர்கள் பற்றிய தனது படத்தை மார்ட்டின் சீஸ் அவர்கள் யூ டியூபில் இருந்து அகற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது.

தான் ஏன் நீதியற்ற முறையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டேன் என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் Lim Hock Siew அவர்கள் அந்த வீடியோவில் பகிரங்கமாகப் பேசுகிறார்.

அவரை சிங்கப்பூர் அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 20 வருடங்கள் தடுத்து வைத்திருந்தது.

கம்யூனிஸத்தை நாட்டில் இருந்து வேரறுக்கும் நடவடிக்கையாக அவர் தடுத்து வைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

அத்துடன் இந்தப்படம், அவரது தடுத்து வைப்புக் குறித்து திரித்து, தவறான தோற்றத்தைக் காட்டவிழைகிறது என்றும் அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

மார்ட்டின் சீஸ் அவர்களின் முன்னைய இரு படங்களும் கூட சிங்கப்பூர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter