>> Monday, May 17, 2010

மின்னணுக் கழிவு: தமிழகம் புதிய செயல்திட்டம்


இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் ஏராளமாக சேர்ந்துவருகின்றன
மின்னணு கழிவுப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் வருவதைத் தடுக்கும் நோக்கிலான தனியான செயல்திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது.
இந்திய மாநிலம் ஒன்று இவ்விஷயத்தில் தனி கொள்கையையும் செயல் திட்டத்தையும் வகுத்திருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

எலக்டிரானிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான இந்தக் கொள்கையை தமிழக அரசு வரைவதில் தமிழ் நாடு மின்னணுவியல் கழகமான எல்காட் முக்கியப் பங்காற்றியுள்ளது.

மின்னணுக் கழிவு சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகளைப் பெற்று அமைக்கப்பட்ட விசேடக் குழு இந்த புதிய கொள்கையை வரைந்துள்ளது.

தேசியக் கொள்கைக்கும் செயல்திட்டத்துக்கும் பொருந்தும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக எல்காட் கூறுகிறது.

இந்தியாவில் சமீபகாலமாக பெருமளவில் மின்னணுக் கழிவுகள் சேர்ந்து வருகின்றன. ரீசைக்கிலிங் எனப்படும் மறுசுழறி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான எலக்டிரானிக் குப்பைகள் இந்தியாவை வந்து சேர்கின்றன.

"மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள தொண்ணூறு சதவீதமானோர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறாதவர்கள் என்பதால், அதில் ஒழுங்கு வழிமுறைகளை ஏற்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதை இந்த புதிய செயல்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது." என தமிழோசையிடம் பேசிய எல்காட் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு கூறினார்.

மின்னணுக் கழிவை சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வகையில் அகற்றுவது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் சந்தோஷ் பாபு குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter