>> Tuesday, December 15, 2009

கோபன்ஹேகன் மாநாடு: செல்வந்த நாடுகளின் போக்குக்கு வளர்முக மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்ப்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச உச்சமாநாட்டில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தமது கரிசனைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று கூறி ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா சீனா போன்ற வளர்முக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.

இந்நாடுகள் தங்களது ஒத்துழைப்பையும் விலக்கிக்கொள்வதாகக் கூறியிருந்தன.

கோபன்ஹேகனில் ஏற்படும் புதிய உடன்படிக்கை கியோட்டா ஒப்பந்தங்களை ஒட்டி அமைய வேண்டும் என்று இந்த நாடுகள் கோருகின்றன.

கியோட்டோ ஒப்பந்தப்படி புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கும் பொறுப்பு தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மீதே உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் கோரிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

புவியை வெப்பமடையச் செய்யவதை கணிசமான அளவில் குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதற்கு மிகக் குறைந்த அளவான கால அவகாசமே உள்ளது என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இவ்விவகாரம் தொடர்பில் கோபன்ஹேகன் மாநாட்டை அவதானித்துவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சலீம் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


நீதிபதி தினகரனை பதவி நீக்கக் கோரி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மனு


நீதிபதி பி.டி.தினகரன்
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றம்சாட்டி பதவியகற்றும் செய்யும் 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கான மனு ஒன்றை இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 76 பேர் கையளித்துள்ளனர்.

பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக போன்ற கட்சிகளின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்த மனு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேர்வுசெய்யப்படுவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு வழங்கியிருந்த பரிந்துரையை இந்திய அரசு அண்மையில் நிராகரித்திருந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வலுவிருப்பதால் அவர் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக நீடிக்கக்கூடாது என்று மகஜர் கையளித்துள்ள நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து இந்து நாளிதழ் சட்ட விவகாரச் செய்தியாளர் ஜே.வெங்கடேசன் வழங்கும் விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


குறைவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு கூடுதல் பயன்; வெகுவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு இழப்பு: பிரிட்டனில் புதிய ஆய்வு


மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளிகளால் சமூகத்திற்கு நல்ல பலன் கிடைப்பதாகக் அறிக்கை கூறுகிறது.
பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டு வங்கி ஊழியர்களைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களும், குப்பை அள்ளுபவர்களும் சமூகத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியவர்களாக இருக்கின்றனர் என பிரிட்டனின் இடதுசாரி பொருளாதார ஆய்வு மையம் ஒன்று கூறுகிறது.

குறிப்பிட்ட ஒரு வேலையால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன என்று ஒரு புதிய வகையில் மதிப்பிடும்போது இவ்வாறான முடிவு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த ஊழியர்களால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன? அந்த ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் என்ன? என்பவற்றை ஒப்பிட்டு தி நியூ எகனாமிக் பவுண்டேஷன் என்ற ஆய்வு மையம் மதிப்பீடு ஒன்றைச் செய்துள்ளது .

சுகாதாரம் அற்ற ஒரு மருத்துவமனையால் பரவக்கூடிய நோய்களினால் சமூகத்துக்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு பார்க்கையில், அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு டாலர் சம்பளம், பத்து டாலர்கள் மதிப்புள்ள பயனை சமூகத்துக்கு அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


வருமான வரி கணக்காளர்கள் பெறும் ஒரு டாலர் சம்பளத்துக்கு சமூகம் 47 டாலர்களை இழப்பதாகக் கூறப்படுகிறது
முதலீட்டு வங்கி வர்த்தகர் ஒருவர் பெரும் சம்பளம் பெறுபவர் என்றாலும், உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்திருந்த வர்த்தக சந்தை ஸ்திரத்தமை குலைவுக்கு இவர்களும் ஒருவகையில் காரணமாய் இருந்துள்ளனர். அவ்வகையில் பார்க்கையில், இந்த வங்கி வர்த்தகர்கள் பெற்ற ஒவ்வொரு டாலர் சம்பளத்துக்கும் சமூகம் ஏழு டாலர்கள் மதிப்பை இழந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

சமூகம் நிஜமாகவே பெற்ற பயனின் மதிப்பு இவ்வாறு இருக்கும்போது, இவர்களுக்கான ஊதியத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வு ஏன்? என இந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


விளையாட்டரங்கம்

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அணிகள் இழந்துள்ளன.
2012 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, டென்னிஸ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.
உலக குத்துச் சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை உக்ரைன் நாட்டின் விடாலி கிளிட்ஸ்க்ஷோ தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter