>> Tuesday, December 8, 2009

'இலங்கைக்கு தற்போதைக்கு இந்திய எம்பிக்களை அனுப்புவது உசிதமல்ல'- எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ள, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது உசிதமானது அல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்புவது சரியாக இருக்குமா என்று கேட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவது குறித்து அரசு தீவிரமாக் பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்வதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ள நிலையில், அதை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் இன்று தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக, சிறுபான்மை தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியா அதைத் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் கட்சி மாறினார்


இலங்கை ஜனாதிபதியுடன் எஸ்.பி.திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்று விலகி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திடம் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்தாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொள்ளாத ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரிக்க தான் விரும்பவில்லை என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றால் அவருடன் இணைந்து சில காலங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இராணுவ ஆட்சியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த தீர்மானத்தையும் அறிவிக்காதுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


குறைந்த விலையிலான தண்ணீர் வடிகட்டி


புதிய நீர் வடிகட்டியை அறிமுகப்படுத்தும் ரத்தன் டாடா
இந்தியப் பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமம் குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடிய புதிய தண்ணீர் வடிகட்டும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களை குறிவைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டருக்கும் குறைவான இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி இயங்க மின்சாரமோ, தொடர்சியான தண்ணீர் விநியோகமோ தேவையில்லை.

இந்த சாதனத்தை தயாரிக்க 10 ஆண்டுகள் ஆனது. இந்த சாதனம் புதிய சந்தைகளை திறந்து விட்டிருப்பதாக டாடா கூறிகிறது.

உலகம் முழுதவதிலும் 90 கோடி பேர் சுத்தமான குடி நீர் கிடைக்காமல் உள்ளனர் என்றும் சுகாதார வசதி குறைவாக உள்ளதால், வயிற்றுப் போக்கு காரணமாக அதிக அளவிலானோர் இறக்கின்றனர் என்றும் ஐ நா கூறியுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter