>> Wednesday, December 9, 2009

இலங்கை நிலவரம் பற்றிய செனட் அறிக்கை - அமெரிக்க இராஜதந்திரி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் மூத்த இராஜதந்தரிகளில் ஒருவரான ரொபர்ட் பிளேக் இலங்கையில் போருக்குப் பின்னரான மீள் இணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் இலங்கை சென்றுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் முதற் தடவையாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விடயங்களில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்



--------------------------------------------------------------------------------


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் விவசாய முயற்சிகளில்


வடக்கு கிராமம் ஒன்று
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளவர்கள் விவசாய முயற்சிளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவில் பத்தாயிரம் பேர் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இவர்களில் நாலாயிரம் குடும்பங்கள் நெற்செய்கை மற்றும் காய்கறிச் செய்கையில் தற்போது ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

நெற்செய்கைக்கென இரண்டு ஏக்கர் காணியும், தோட்டச் செய்கைக்கென ஒரு ஏக்கரும் அதிகாரிகளினால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. தோட்டச் செய்கையில் 2000 விவசாயிகள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


ஆந்திராவை பிரித்து தெலுங்கனா என்ற தனி மாநிலம் அமைய வேண்டுமென கோரும் போராட்டம்


எல்லை வரைபடம்
தென் மாநிலமான ஆந்திராவில், 10 மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டிஆர்எஸ் எனப்படும் தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தொடர்ந்து 10வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடரும் நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

உடல்நிலை மோசமடைந்து வருவதால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களின் அறிவுறுத்தலையும் சந்திரசேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.

ராவின் இரத்தப் பரிசோதனை, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதை உறுதி செய்திருப்பதாகவும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் சந்திரசேகர் ராவ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அரசு உறுதியளித்தால்தான் தனது உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதாக ராவ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தை உள்ளடக்கிய 10 மாவட்டங்களைக் கொண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter