>> Saturday, February 6, 2010

இலங்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத் தேவையான தற்காலிக வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகளின் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
அவசரகால சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது.
அதேவேளை, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
மாறுபட்ட கருத்துக்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை களையும் நோக்கிலுமே இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தான் கருதுவதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், சட்டத்தின் ஆட்சியை கட்டுப்படுத்தி முடிவுகளை எடுப்பதற்கான நடைமுறையாகவே இதை பார்க்க வேண்டும் என கருத்து வெளியிடுகிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பாலகிருஷ்ணன்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ நா அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது-இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா சபையின் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான உயர்மட்டக்குழுவின் சமீபத்திய அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகள் மிகப்பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
குறிப்பாக அந்த அமைப்பின் தலைவர் முனைவர் ராஜேந்திர பச்சௌரி அவர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் அந்த அமைப்பின்மீது தாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா மன்ற செயற்பாடுகள் சமீபகாலங்களின் சாதித்ததைவிட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோபன் ஹேகன் மாநாட்டில் உலக நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படாதது கடந்த ஆண்டின் மிகப்பெரும் தோல்வி யாக பார்க்கப்பட்டது.
அந்த பின்னடைவிலிருந்து ஐநா மன்றமும், பருவநிலைக்கான அதன் உலக அளவிலான அமைப்பும் மீள்வதற்குள் அந்த அமைப்பின் பருவநிலை தொடர்பான விஞ்ஞான நடவடிக்கைகளும், அது தொடர்பிலான அதன் அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகளும் பெரும் சர்ச்சையில் சிக்கின.
இது தொடர்பிலான விரிவான தகவலை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்.
தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினர்-பாகிஸ்தான் சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்
தற்கொலை குண்டுதாரியாகும்படி நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறும் சிறுமி மீனாதற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனச் சிறுமி, தன்னைத் தற்கொலைக் குண்டுதாரியாகுமாறு நிர்ப்பந்தித்த தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பி வந்து தனது கதையை பிபிசியிடம் கூறியிருக்கிறார்.
இவரது கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள்.
“நீ தற்கொலை குண்டுதாரியாகி இறந்தால், எங்களை விட முன்னதாக சொர்க்கத்துக்கு போவாய்" என்று அந்தப் பெண்ணின் சகோதரனும் தந்தையும் கூறியுள்ளனர்.
இவரது இளைய சகோதரியும் இந்த மாதிரி தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter