>> Saturday, November 27, 2010


ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்


இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில், தொலை தொடர்புத்துறையில் 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொலை தொடர்புத்துறைச் செயலர் ஆகியோரிடம், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தத் தவறியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவிசி எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிஏஜி எனப்படும் இந்தியக் கணக்குத் தணிக்கை ஆணையம் ஆகிய இரு முக்கிய விசாரணை அமைப்புக்களும், இந்த முறைகேட்டில் அமைச்சர் மற்றும் செயலருக்கு உள்ள தொடர்புகள் குறித்து கடுமையாகக் கண்டித்திருந்த போதிலும், புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

எந்த ஒரு பொறுப்பான நபரும், அமைச்சர் மற்றும் செயலரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துவார்கள். ஆனால், 8 ஆயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறும் புலனாய்வுத்துறை, அந்த இருவரிடமும் விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிக் கேட்டார்கள்.

அதற்கான தாமதம் குறித்து, மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், புலனாய்வுத்துறைக்கென தனியான விசாரணை நடைமுறை உள்ளதாகத் தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை கடைடிபிக்கப்படவில்லை என்றும், அதனால் அரசுக்கு உத்தேசமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழ்பபு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முடக்கம்

இதனிடையே, ஆ. ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.

இதனால், வியாழக்கிழமை தொடர்ந்து 10-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter