>> Tuesday, November 30, 2010

விக்கிலீக்ஸில் அமெரிக்க ராஜாங்க ரகசியங்கள்


விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க ராஜாங்க அலுவலர்கள் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களில் உள்ள முக்கிய சாரம்சங்களை பார்ப்போம்.

இரான் மீது தாக்குதல்

பல அரபு நாட்டு தலைவர்களும், அவர்களது பிரநிதிகளும் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். இரானின் சந்தேகத்துக்கு உரிய அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தவே இந்த தாக்குதல் கோரிக்கை.

ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் இருக்கும் சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைர், சவுதி மன்னர் அப்துல்லா, அடிக்கடி அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.


சவுதி மன்னர் அப்துல்லா

அமெரிக்கா ‘பாம்பின் தலையை வெட்ட வேண்டும்’ என்று மன்னர் விரும்புவதாக அல் ஜுபைர் கூறுகிறார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சரோ, தெஹ்ரான் மீது தீவிரமான தடைகளை விதிக்க வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார்.

பஹ்ரைனின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபாவுக்கும் அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரயஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ‘எப்படியாவது’ இரானின் அணு திட்டத்தை நிறுத்துமாறு மன்னர் கூறியுள்ளார்.

ஐ.நாவில் வேவு பார்ப்பது

அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டனின் அவர்களின் பெயரில் அனைத்து ராஜாங்க அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டுள்ள ரகசிய செய்தியில், ஐ.நாவில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் உயிரியில் தகவல்களான, மரபணு, கைரேகை போன்றவற்றை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

துணை செயலர்கள், விசேஷ அமைப்புகளின் தலைவர்கள், பிரதான ஆலோசனையாளர்கள், தலைமை செயலரின் முக்கியமான செயலர்கள், அமைதி படையினரின் தலைவர்கள், இராணுவ தலைவர்களின் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்க சொல்லப்பட்டுள்ளது.

அதே போன்று கிரெடிட் கார்ட், மின்னஞ்சல் முகவரிகள், ரகசிய எண்கள், பெயர்கள், கணிணீ வலைகளுக்கான ரகசிய குறியீடுகள் போன்றவற்றை சேகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற ஒன்பது ரகசிய உத்தரவுகள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் கொண்டலீசா ரைஸின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் மீதான கருத்து

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணியை ரோமில் உள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரி ஒருவர், பொறுப்பற்ற, சுயதம்பட்டம் அடிக்கும் நவீன ஐரோப்பாவுக்கு பிரயோஜனமில்லாத தலைவர் என்று வர்ணித்துள்ளார்.

அதே போன்று ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சாலா மெர்கல் அவர்களை எவ்விதமான கற்பனா திறன் இல்லாத தலைவர் என்றும், லிபிய தலைவர் கர்னல் கடாபி ஒரு உக்ரைன் பேரழகியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


'தடுமாறி கொண்டிருக்கும் பெருசு' - அமெரிக்கா

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் அவர்களை தடுமாறி கொண்டிருக்கும் பெருசு என்று வர்ணித்துள்ள ராஜாங்க அதிகாரிகள் இரான் அதிபர் மஹமூது அஹெமெதிநிஜாத் அவர்களை ‘ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக தலைவர்களை இவ்வாறு கிண்டலடிக்கும் தொனியில் ராஜாங்க அதிகாரிகள் தகவல்களை அனுப்பியிருந்தாலும், இவற்றால் எல்லாம் ராஜாங்க உறவுகள் பாதிக்காது என்று பிபிசியின் ராஜாங்க ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

இதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள ரகசிய செய்தி ஒன்றில், பாகிஸ்தானின் அணுசக்தி உலைகளில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளையும், அவற்றை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது கொண்டுள்ள கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்று மிகவும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பாகிஸ்தானில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளியேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதவும் தெரிய வந்துள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அஸாங்கே

இது போன்ற தகவல்கள் ராஜாங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அஸாங்கே, அரபு செய்தியாளர்களிடம் வீடியோ மூலம் ரகசிய செய்தி கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter