>> Tuesday, July 23, 2013

இலங்கையில் முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுமா?

வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி, கடந்த வாரம் தமிழோசையிடம் கூறியிருந்தார்.
ஆதரவாளர்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"வாக்குகள் சிதறும் வாய்ப்பு"



வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது இயலாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கட்சி உறுப்பினர்களுடன் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்
வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கியுள்ளதையும் மறந்துவிட முடியாது எனவும் கூறும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளை சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும் கூறுகிறார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter