>> Friday, October 9, 2009

நடிகைகள் பற்றிய அவதூறு செய்தி: தினமலர் செய்தி ஆசிரியர் கைது

தினமலர் பத்திரிகையின் சென்னைப் பதிப்பு செய்தி ஆசிரியர் லெனின் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் லெனின் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான துணை நடிகை புவனேஸ்வரி தொடர்பான செய்திகளில், மேலும் சில முன்னணி நடிகைகள் குறித்து தவறான மற்றும் அவதூறான செய்திகளை தினமலர் வெளியிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் லெனின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

லெனின் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.



--------------------------------------------------------------------------------


முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்


முதல்வர் கருணாநிதி
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் நிலைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமிழக அரசு அணைக்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தடை விதிக்க கோரியும் மற்றும் கேரள அரசு ஆய்வு மற்றும் சர்வே பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த கோரியும் மனு ஒன்றினை வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.



--------------------------------------------------------------------------------


யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிருந்த தமிழ் மருத்துவருகளுக்கு மீண்டும் அரசு பணி


டாக்டர் சத்யமூர்த்தி
இலங்கையில் அண்மையப் போரின்போது விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றி பிறகு அரசால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்கள் மூன்று பேர் மீண்டும் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்காவது மருத்துவர் உயர் படிப்பு படிக்க சென்றுள்ளார்.

வட மாகாண கூடுதல் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சத்யமூர்த்தி, தான் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து தமிழோசையில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

வட மாகாண திட்டமிடல் அதிகாரியாக டாக்டர் வரதராஜா பணியேற்றுள்ளார்.

வவுனியாவில் தற்காலிகமாக இயங்கும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார திணைக்களனில் டாக்டர் ஷண்முகராஜா பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க டாக்டர். இளஞ்செழியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் இன்னமும் கைவிடப்படவில்லை.



--------------------------------------------------------------------------------


கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1 comments:

Hema October 14, 2009 at 5:33 PM  

உங்களின் இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள். மென்மேலும் எழுதவும்.- Hemalatha

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter