>> Tuesday, March 23, 2010

கொழும்பில் எம்.டீ.வி நிறுவனத்தின் மீது மீண்டும் தாக்குதல்
இலங்கையில் எம்.டீ.வி/எம்.பி.சி ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரேபுறூக் பிளேஸில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.
தம்மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு அந்த நிறுவன ஊழியர்களும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து தாக்கியவர்கள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் சூழல் பாதிப்புக்காக இழப்பீடு செலுத்துமாறு கோக்ககோலா நிறுவனத்திடம் கோரிக்கை
கோக்கோ கோலா நிறுவனம் இழப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்துள்ளதுதென்னிந்திய மாநிலமான கேரளாவில் கோக்கோகோலா பானத் தயாரிப்பு தொழிற்சாலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடாக இந்திய ரூபாயில் 216 கோடியை அந்த நிறுவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில் ஒன்றான இந்த தயாரிப்பு ஆலை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர்வாசிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2005ம் ஆண்டில் மூடப்பட்டது.
ஆனால் தமது நிறுவனத்திற்கு எதிராகக் கோரப்பட்டுள்ள இழப்பீடு அடிப்படை ஆதாரமற்றதென கோக்ககோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் கம்யூனிசசார்பு அரசாங்கம், அந்த மாநிலத்தின் பாலக்காட் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கோக்க கோலா தொழிற்சாலைக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்துவந்த குழுவின் சிபார்சுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
கோக்ககோலா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழல் பாதிப்புக்களுக்கு அந்த நிறுவனம் இழப்பீடு செலுத்தியே ஆகவேண்டுமென விசாரணைக்குழு கூறியுள்ளது.
கோக்க கோலா நிறுவனம், 1999ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளால் விவசாய பூமிகளையும் சுற்றுச்சூழலையும் நாசம் செய்துள்ளதுடன் நிலத்தடி நீரையும் முழுமையாக உறிஞ்சியெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டருந்தது.
ஆனால் இதற்கு எதிராக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்தியாவிலுள்ள கோக்ககோலா நிறுவனத்தின் அலுவலகம் இந்த சிபார்சுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினாலும் மற்றைய நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள், கோக்ககோலா நிறுவனத்தின் தொழிற்சாலையினால் எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புக்களும் ஏற்படவில்லையென உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக நாடாளாவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிறுவனத்தின் ஆலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இரண்டு கோடிப்பேர் ஆர்சனிக் நச்சு கலந்த குடிநீரையே அருந்துகின்றனர்
குடிநீருக்காக வெள்ளத்தினூடாக செல்லும் சிறார்கள்வங்கதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்று பெருமெடுப்பபிலான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு வாழும் இரண்டு கோடி மக்கள் தொடர்ந்தும் ஆர்சனிக் நச்சுப் பொருள் கலந்த நீரையே அருந்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையும், வங்கதேச அரசாங்கமும் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.
கோடிக்கணக்கான வங்கதேச மக்களின் உடல்நலனுக்கு ஆர்சனிக் வேதிப்பொருளே தொடர்ந்தும் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த நாட்டின் முக்கிய உணவுப் பொருளான நெல் மாசடைந்த நீரின் மூலம் விளைவிக்கப்படும் போது, அறுவடை செய்யப்படும் அரிசியில் கூட ஆபத்தான அளவுக்கு ஆர்சனிக் இருக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்சனிக் நச்சுப் பொருள் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு வழி செய்கிறது.
இந்த தகவல் பற்றிய மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
''புத்த மதத்தை கைவிட்டதுதான் எனது பின்னடைவுக்கு காரணம்''- டைகர் வுட்ஸ்
டைகர் வுட்ஸ்உலகின் முன்னணி கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ், தான் புத்த மதத்தை கைவிட்டதும், வாழ்க்கையின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரான போக்குடன் நடந்து கொண்டதும், தியானம் செய்வதை நிறுத்தியதுமே அண்மையில் தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று தெரியவந்த பிறகு ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் சுமார் ஆறு மாதங்களாக கோல்ஃப் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.
கோல்ஃப் விளையாட்டில் உலகத் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருந்த டைகர் வுட்ஸுக்கு தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அவரது விளையாட்டும் அது தொடர்பான வர்த்தகமும் பெருமளவு பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் கோல்ஃப் சேனலின் கெல்லி தில்மேனுக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே தனது பின்னடைவுக்கான காரணங்களை டைகர் வுட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter