>> Monday, June 14, 2010


"ஐ.எஸ்.ஐ.க்கு தாலிபானுடன் தொடர்பு"


பாகிஸ்தானிய உளவுத்துறையினர் தாலிபான்களுக்கு ஆதரவு தருவதாக நெடுங்காலமாக சந்தேகங்கள் நிலவிவருகின்றன
பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் ஆப்கானில் உள்ள தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
முன்பு கருதப்பட்டிருந்ததை விட அதிக அளவில் தாலிபான்களுக்கு நிதியும், பயிற்சியும், அடைக்கலமும் ஐ.எஸ்.ஐ. வழங்கிவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் களத்தில் போராடும் தாலிபான் தளபதிகள் ஒன்பது பேருடன் உரையாடியும் ஆறு பேரை விசாரித்தும் இந்த ஆய்வை நடத்தியதாக செல்வாக்குமிக்க லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் உயர்கல்விக் கூடம் தெரிவித்துள்ளது.

தாலிபான்களின் அதிஉயர் நிர்வாக சபை நடத்தும் கூட்டங்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையினர் வந்து கலந்துகொள்வது உண்டு என்று இந்த தாலிபான் தளபதிகள் விசாரணைகளின்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு தலைதூக்கிவிடாமல் பார்த்துகொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தமக்கு உதவியதாக அந்த தளபதிகள் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் காத்திரமாக நிராகரித்துள்ளது.

"இவையெல்லாம் குப்பைக்குச் செல்ல வேண்டிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்" என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Read more...

>> Friday, June 11, 2010




ஃபிஃபா தலைவர் செப் பிளெட்டருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா

உலகக் கோப்பை யாருக்கு?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளை யார் வெல்வார்கள் என்கிற ஆரூடம் பலரால் வெளியிடப்பட்டு வருகிறது.




கால்பந்து விளையாட்டின் மிகச்சிறந்த வீரர் என்று வர்ணிக்கப்படும் பெலே இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியின் போது ஆப்பிரிக்க நாடு ஒன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரேசில் மற்றும் ஸ்பெயின் மிகச்சிறந்த அணிகளை கொண்டிருந்தாலும் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் எனக் கூறுவது கடினமாக இருக்கும் எனவும் பெலே கூறியுள்ளார்.



எனினும் தனது நாடான பிரேசில் இறுதிப் போட்டியில் ஒரு ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுவதை பார்த்தால் தனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பெலே கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று அதில் தேர்வான 32 நாட்டு அணிகள், இந்த இறுதிப் போட்டியில் பங்கு பெறுகின்றன.

இந்த 32 நாடுகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் போட்டி இந்திய இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதில் போட்டிகளை நடத்தும் நாடான தென் ஆப்பிரிக்க அணி மெக்ஸிகோ அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஜோஹனஸ்பர்கில் உள்ள சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.




ஆவலுடன் பார்க்கப்படும் போட்டி

இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டு அணி வடகொரிய அணியை எதிர்த்து ஆடும் போது கால்பந்து விளையாட்டில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய நிகழ்வும் ஏற்படவுள்ளது.

ஐந்து முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்றுள்ள பிரேசில் அணி, 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள வடகொரிய அணையை எதிர்த்து ஆடவுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் 32 நாடுகளின் தரப்பட்டியலில், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது வடகொரியா.

பிரேசில் நாடு தடையற்ற சுதந்திரம் கொண்ட, மகிழ்ச்சித் துடிப்புடன் விளங்கும் ஒரு நாடு. ஆனால் வடகொரியாவோ கடுமையான இரும்புத் திரைக்கு பின்னர் செயற்படும் நாடு.

பிபிசி ஆய்வு

இதனிடையே உலகக் கோப்பையை போட்டியை யார் வெல்லக் கூடும் என்பது குறித்து பிபிசி ஒரு ஆய்வை நடத்தியது.

உலகின் பல பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், மற்றும் இதர வல்லுநர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவுகளின்படி உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்கிற பட்டியலில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. அர்ஜெண்டினா அணி மூன்றாம் இடத்திலும் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.

கருத்துக்கணிப்புகள், ஆரூடங்கள் எல்லாம் எந்த அளவுக்கு சரியாக அமைந்தன என்பது ஜூலை மாதம் 11 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Read more...


இந்திய திருமணங்களில் நூறில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது

விவாகரத்தை விரைவாக்க சட்டத்திருத்தம்



இந்தியாவில் கணவன் மனைவிக்கு இடையிலான திருமண உறவு மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட நிலையை, விவாகரத்து வழங்குவதற்கான கூடுதல் காரணமாக எடுத்துக் கொள்ளும் வகையில், இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இந்திய அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதன்படி, இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ல் திருத்தங்கள் செய்யப்படும்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இதை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

``மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கணவன் மனைவிக்கு இடயிலான உறவு முறிந்துவிட்டால் அதை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு விவாகரத்து வழங்க இந்தத் திருத்தம் உதவும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய விரும்பி மனுத்தாக்கல் செய்தோர், ஒரு தரப்பு மட்டும் வழக்கில் ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடித்து இன்னொரு தரப்புக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்துவோர் விவகாரத்தில் இந்தப் பிரிவு பாதுகாப்பளிப்பதாக இருக்கும். இத்தகயை சட்டம் தேவை என்று சட்டக் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது’’, என்றார் அமைச்சர் அம்பிகா சோனி.

திருமணத் திருத்தச் சட்டங்கள் 2010 என்ற மசோதா மூலம், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter