>> Saturday, November 7, 2009

மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைகளை அகற்ற இலங்கை அரசு புதிய செயல்திட்டம்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சாத்தியம் இருப்பதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை கையாள்வதில் இலங்கை அரசு தனது செயற்பாடுகளை மேம்படுத்த விரும்புவதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அகியவற்றின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை இலங்கை அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன.

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தபோதும் சரி, அது கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த பிறகும் சரி தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விமர்சனங்களை அந்நாட்டின் அரசாங்கம் கடுமையாக மறுத்தே வந்திருந்தது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு இலங்கைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் இலங்கைக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு காட்டிய இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர், இலங்கைக்குள் மனித உரிமை மீறல்கள் என்கிற பிரச்சினையே இல்லை என்று முன்னர் வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கத்துக்கு மாறாக அமைச்சர் சமரசிங்கவின் தற்போதைய கருத்து அமைந்துள்ளது.

மேம்படுத்தப்படவேண்டியவை என்று கருதப்படும் விடயங்கள் தொடர்பில் தாம் ஏற்கெனவே புலனாய்வு செய்து வருவதாகவும், அந்த விடயங்களை உள்ளடக்கிய தேசிய செயல்திட்டம் ஒன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் விபரித்துள்ளார்.

சித்திரவதை, ஆட்கள் கடத்தல், சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆட்கொலைகள், பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு போன்ற பல விடயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த தேசிய செயல்திட்டத்தில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


மீளக் குடியமர்வதற்காக ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்


அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்வதற்காக ஆயிரம் பேர் இன்று அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பிரதேசங்களாகிய நாச்சிக்குடா, முழங்காவில், ஜெயபுரம் தெற்கு ஜெயபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டப்பட்டதன் பின்னர் இம்மக்கள் உடனடியாக அவர்களது சொந்தக் காணிகளுக்குச் சென்று குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றி வந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.



--------------------------------------------------------------------------------


இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்


கண்ணிவெடி அகற்றும் இயந்திரம்
இலங்கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதல்

பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள நாகா பிரிவினைவாதிகளின் மையங்கள் மீது பர்மிய துருப்புக்கள் அதிரடித் தாக்குதலைத் துவக்கியிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பிரிவினைவாதிகளைப் பிடிக்க, பர்மாவில் நாகா பிரிவினைவாதிகளின் மையத்து்ககு எதிர்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மனியக்ஸா கிராமத்துக்கு எதிரே, என்.எஸ்.சி.என். எனப்படும் தேசிய நாகலாந்து சோஷலிஸ கவுன்சிலின் கப்லாங் பிரிவின் இரண்டாவது பட்டாலியனுக்கான தலைமையகம் அமைந்துள்ளது.

அந்த முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், பர்மியத் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அதுபற்றி பர்மிய ராணுவ அதிகாரிகளோ ராஜாங்க அதிகாரிகளோ எந்தத் தகவல்களையும் தர விரும்பவில்லை.

ஆனால் நாகா முகாம்கள் மீது பர்மியத் துருப்புக்கள் தாக்குதல் நடத்துவதைக் காணமுடிந்ததாக மனியக்ஸா கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

Read more...

>> Thursday, November 5, 2009

ஜனாதிபதி ராஜபக்ஷ வன்னி விஜயம்



இலங்கை அரச படைகளினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப்பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமரச் சென்றுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், கஸ்டமான காலம் முடிவடைந்து புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்காகப் பாடுபடும் அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த வன்னி விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


'சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்'


சரத் பொன்சேகா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல் இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கேள்விகள் கேட்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.



--------------------------------------------------------------------------------


இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்


வகுப்பறையில் சிலுவை
இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Read more...

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

>> Tuesday, November 3, 2009

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ''ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், '' நான் அப்படி நினைக்கவில்லை'' என்று பதிலளித்தார்.



--------------------------------------------------------------------------------
தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்துவதென தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இம்முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாததன் காரணமாக அகதிகள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானதன் பின்னணியில், முகாம்களின் நிலை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அவசரக் கூட்டமொன்றை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.

அதேவேளை, ஏற்கனவே செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்களென்று தெரிவித்த ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக நிறுவனர் சா.செ.சந்திரஹாசன், சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை வழங்குவது என்ற ஆலோசனை குறித்து தம் மக்களிடம் பேசிவருவதாகவும், அவர்களுடனான கலந்தாய்விற்கு பிறகே தங்களால் இறுதி முடிவு எதுவும் எடுக்கமுடியும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------
கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு விபத்து: 23 பேரைக் காணவில்லை

இந்து மகா சமுத்திரத்தின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய பிராந்தியத்தைச் சேர்ந்த கொக்கோஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கும், இலஙங்கைக்கும் இடையே இருக்கின்றன.

உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய றோயல் ஃபிளயிங் டாக்டர் சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த ஃபிளயிங் டாக்டர் சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார்.

எவரும் இலகுவில் செல்லாத இந்து மகா சமுத்திரத்தின் அந்தப் பகுதியில், இந்த சிறிய படகு மூழ்கத்தொடங்கிய போது இருளத்தொடங்கிவிட்டது.

அந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் அகதிகளாக தஞ்சம் கோரிச்சென்றவர்களாக இருக்கக் கூடும்.

சுமார் 17 பேர் வரை தாய்வான் நாட்டுக் கப்பலால் மீட்கப்பட்டாலும் ஏனைய பலரை இன்னமும் காணவில்லை.

தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter