>> Friday, July 9, 2010


விமல் வீரவன்ச

விமல் வீரவன்ச உண்ணாவிரதம்



இலங்கை அரசின் வீட்டுவசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்ச, கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும் அது குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியும் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகங்களுக்கு முன்னர் விமல் வீரவன்ச அவர்களின் கட்சியினரால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அறிவிப்பை புதன்கிழமை அவர் வெளியிட்டார்.

தமது பாதுகாப்பு படையினர் போர் குற்றங்கள் எதையும் செய்யவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

ஆதரவு


போராட்டத்துக்கு புத்த பிக்குகள் ஆதரவளித்துள்ளனர்
இந்தப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றுக்கு பல புத்தபிக்குகள் ஆதரவும் ஆசியும் வழங்கியுள்ளனர்.

அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இடத்துக்கு அருகில், ஐ நாவின் தலைமைச் செயலரின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு அதன் கீழ் அவரை அவமதிக்கும் வகையில் தகாத வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

முட்டாள்

மேலும், பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்திருக்கும் விசாரணைக் குழுவில் இருக்கும் மூவரின் படங்களும் இதே போல அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன.

அதற்கு கீழ் “மூன்று முட்டாள்கள்” என்கிற வாசகம் எழுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அந்தக் குழு கலைக்கப்பட்டு, போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்படும் வரை, தான் சாகும் வரை மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என விமல் வீரவன்ச கூறுகிறார்.

Read more...





தமிழ்அகதிகள் குறித்து ஐநா புதிய கொள்கை


இடம்பெயர்ந்து அகிதிகளாக வாழும் தமிழர்கள்
இலங்கையில் கடந்த ஓராண்டில் பொதுவாக நிலைமை சற்று ஸ்திரமடைந்திருப்பதாகக் கூறும், ஐ.நா மன்ற அறிக்கை, இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டுவந்த extended refugee definition, என்பது இனி கிடைக்காது என்று அறிவித்துள்ளது.
அதாவது இலங்கையில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக, அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களின் விண்ணப்பங்கள் பரந்துபட்ட அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்கப்பட்ட நிலைமை, இனி வழங்கப்படாது என்று ஐ நா கூறியுள்ளது.

ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம், கடந்த ஆண்டுக்கான, தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இதை தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசியல் நிலைமை ஸ்திரமடைந்திருக்கிறது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின், தெற்காசிய மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்காகப் பேசவல்ல, தகவல் அதிகாரி, பாபர் பலூச் அவர்களிடம் தமிழோசை கேட்டபோது, 2009ம் ஆண்டு வரை இருந்த வழிகாட்டுநெறிமுறைகளுக்கும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இலங்கையிலிருந்து வரும் அகதிகள் அல்லது மக்களுக்கு, அவர்கள் இலங்கையர்கள் என்பதாலேயே பொதுவான ஒரு அகதிகள் என்ற விளக்கம் அல்லது அர்த்தப்படுத்திக்கொள்வது இனிமேல் இருக்காது என்பதுதான் என்று கூறினார்.


ஐ நாவின் அகதிகள் நிறுவனம்

இந்த எக்ஸ்டெண்டட் ரெப்யூஜி டெபினிஷன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன வென்றால், தங்கள் தாய்நாட்டிலிருந்து வெளியே வரும் மக்கள், அந்த நாட்டுக்கு, பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப முடியாத ஒரு பொதுவான நிலை இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விளக்கம். இந்த நிலையைக் கடந்த ஒரு ஆண்டாக நாம் பார்க்கவில்லை. ஆனால் இதைச் சொல்லும் நிலையிலேயே, இலங்கையிலிருந்து மற்ற நாடுகளுக்கு வந்து தஞ்சம்கோரும் நிலையில் இருக்கும் மக்கள், 1951 வழிமுறைகளின் படி ,அகதிகள் அந்தஸ்து கோரலாம். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டும் . அதே போல அவர்கள் 1967 வழிமுறைகளின்படியும் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இருந்தும் ஏற்கனவே அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் அந்தஸ்து ரத்து செய்யப்படவேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை என்றார் பாபர் பலோச்.

கண்டனம்

ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், கவலைக்குரியவை, நியாயமற்றவை என்று கூறுகிறார் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த குமாரசாமி சிதம்பரம் பிள்ளை.

லண்டனிலிருந்து இயங்கும் இந்தக் குழுவைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளை தமிழோசைக்கு கருத்து வெளியிடுகையில், இலங்கையில் போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறிவரும் நிலையில் இந்த நெறிமுறைகள் வந்திருப்பது தஞ்சம் கோரும் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.ப்ளஸ் என்ற வர்த்தக சலுகைத் திட்டத்தை இலங்கைக்கு நீட்டிக்க, மனித உரிமைகள் மேம்படுத்துவது உள்ளிட்ட 15 நிபந்தனைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டதையும் சிதம்பரம் பிள்ளை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இன்னும் 50,000 பேர் போரினால் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் உயிர் தப்ப நாட்டிலிருந்து படகுகள் மூலமாக வெளியேறும் முயற்சிகளை எடுத்து வருவதையும் , அந்த முயற்சிகளில் அவர்கள் உயிரிழப்பதையும் பார்க்கிறோம். எனவே நிலைமைகள் முற்றிலும் சீரடைந்துவிட்டதாகக் கூறமுடியாது என்றார்.

ஐ.நா மன்ற அமைப்பின் இந்த புதிய அறிவிப்பை மாற்ற புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து முயற்சி எடுக்கும் என்றார் அவர்.

அரசு வரவேற்பு

இலங்கை அரசு ஐ.நா மன்றத்தின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறும் முன்னேற்றத்தைப் பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் , சுகாதாரம்,பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் சம சந்தர்ப்பம் என்ற இலக்குகளை எட்ட இலங்கை அரசும் மக்களும் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Read more...


இலங்கை முகாம்களுக்கு பான் கீ மூன் விஜயம் செய்துள்ளார்

கொழும்பு ஐ நா அலுவலகம் மூடல்



அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான போராட்டத்தை அடுத்து கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தை மூட ஐ நா முடிவு செய்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களின் பணிகள் சுமுகமாக நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை சீர் செய்ய இலங்கை அரசு செய்யத் தவறியது ஏற்றுக் கொள்ளமுடியாததாக ஐ நா வின் தலைமைச் செயலர் கருதுவதாக அவரது சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை கூறுகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரின் தலைமையில் ஒழுங்கற்ற வகையில் கொழும்பிலுள்ள ஐ நா வின் அலுவலகம் முன்பாக நடத்தப்படும் போராட்டங்கள் காரணமாக, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகத்தை மூட தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அங்கு இடம் பெற்று வரும் நிகழ்வுகளை அடுத்து, இலங்கையிலுள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் அவர்களை ஆலோசனைக்காக நியூயார்க் வரும்படி பான் கீ மூன் அழைத்துள்ளார்.

இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலர் கோரியுள்ளதாக அவரது சார்பிலான அறிக்கை கூறுகிறது.




ஐ நா வின் அலுவலகம் இலங்கையில் செயற்படுவதை உணர்ந்து, அதற்கேற்ற நெறிமுறைகளுடன் அந்நாட்டு அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு தாங்கள் செய்து வரும் உதவிகள் தங்குதடையின்றி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter