>> Tuesday, November 10, 2009

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் பூர்த்தியாவதை ஜெர்மனி கொண்டாடியுள்ளது


ஜெர்மன் தலைவி அங்கேலா மெர்க்கெலுடன், முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ் மற்றும் முன்னாள் போலந்து அதிபர் லெக் வலேசா

பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபது வருட நிறைவைக் குறிக்கும் வகையிலான வைபவத்தில் கலந்துகொண்ட ஜெர்மனிய ஆட்சித் தலைவரான அங்கேலா மெர்க்கல் அவர்கள், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் பாலம் ஒன்றின் மூலம் வைபவரீதியாக நடந்துவந்தார்.

இந்தப் பாலம்தான் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது முதன் முதலில் திறக்கப்பட்ட எல்லைக் கடவை மையம் ஆகும்.

முன்னாள் சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பசேவ், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக வெற்றிகரமாக சவால் விடுத்த போலந்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அதிபராக வந்தவருமான லெக் வலேஸா ஆகியோர் இந்த வைபவத்தில் மெர்க்கெலோடு நடந்து வந்தார்கள்.

ஜெர்மனியின் கிழக்குப் பகுதி போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறாத நிலையில், ஜெர்மனியின் இணைவு இன்னமும் முழுமை பெறவில்லை என கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவரான மெர்க்கெல் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்ற பிரச்சினையை சமாளிப்பதில் கூட்டாக செயல்படுவது என்பதற்கு இலங்கையும் ஆஸ்திரேலியாவும் உடன்பட்டுள்ளன.

கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித்துக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை அகதிகள் அடங்கிய கப்பலொன்று ஆஸ்திரேலியா செல்லும் வழியில்இந்தோனேஷியாவில் கடந்த மாதம் வழிமறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் வருகின்றது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு நோக்கி வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


நீதிபதி தினகரனுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது


நீதிபதி பி.டி.தினகரன்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் அரசு நிலத்தை சட்டவிரோதாமாக கைப்பற்றியதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் தமது பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சிலர், தினகரன் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிமன்றத்திற்குள் புகுந்து அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அவரது பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தாம் விசாரித்துக்கொண்டிருந்த வழக்கை பாதியில் இடைநிறுத்திவிட்டு, நீதிபதி தினகரன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் நீதிபதி தினகரன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தான் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் கைது


திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சென்னையை அடுத்த திருவள்ளூரில் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று திருவள்ளூரில் நில மீட்புப் போராட்டம் நடத்த முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வரதராஜன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மனதில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஞாயிறன்றே அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

போராட்டம் குறித்து விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் ஞாயிறு மாலையே கைதுசெய்யப்பட்டிருந்தனர்.



--------------------------------------------------------------------------------


காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்


திருநாவுக்கரசர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியையும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

கடந்த 2002ல் திருநாவுக்கரசர் ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆர்.-அண்ணா திமுக கட்சி பாரதீய ஜனதாவில் இணைந்திருந்தது.



^^

Read more...

>> Monday, November 9, 2009

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக வெடிக்கும்: சீமான்

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே இன உணர்வுமிக்க நாங்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்தோம். அதன் விளைவாக தென் மாவட்டத்தில் தென்காசியையும், வடமாவட்டத்தில் ஈரோட்டிலும் வென்றோம்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. மனிதநேயம் பேசும் மார்க்ஸிஸ்டுகளும் இதனை ஆதரிக்கவில்லை. திராவிடம் பேசி பேசி தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம்.

கடந்த 2004 பாராளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி பிரதமர் ஆக தமிழகம் புதுவையில் இருந்து 40 க்கு 40 இடங்களை தந்தோம். ஆனால் அவர் கட்சியில் இருந்து வளர்ந்த சரத்பவார், சங்மா போன்றவர்கள் வெளிநாட்டவர் பிரதமர் ஆவதா? என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து 40 எம்.பிக்களை வழங்கிய தமிழர்களுக்கு நீங்கள் தந்த பரிசு, அருகே உள்ள இலங்கையில் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து உதவினீர்கள். எல்லா நாட்டு விடுதலையும் ஆதரித்த இந்தியா தமிழ்ஈழ விடுதலையை மட்டும் பயங்கரவாதம் என்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவன் சமஉரிமை கொடுப்பானா? ராஜீவ்காந்தி அனுப்பிய அமைதிப்படை அங்கு சென்று சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடுவராகத்தானே செயல்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை மாறாக தமிழ் மக்களை சிங்கள ராணுவம் எதைச்செய்ததோ அதைவிட கொடுமையான காரியங்களில் ஈடுபட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய ராணுவம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரத்தமிழ் ஈழம் குடியரசு அமைந்து 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் .

உலகின் பெரிய தேசிய இனமான தமிழ் இனத்திற்கு என தனி ஈழ நாடு கிடைக்க பிரபாகரன் பாடுபட்டு வந்தார். அதற்காக ஒரு லட்சம் தமிழ் ராணுவத்தை அமைத்திருந்தார். அதனை சிங்கள ராணுவம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வலிமை மிக்க நாடுகளின் ராணுவ துணையோடு ஈழ ராணுவத்தை அழித்திருக்கிறார்கள் .

குஜராத்தில் நிலநடுக்கம். தன்வீட்டில் நடந்த அவலமாக கருதி உதவினோம், கார்க்கில் போராட்டத்தில் அதிக நிதி கொடுத்து உதவினோம் . இந்தியர் என்ற உணர்வில் தமிழர்களாகிய நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்திய நாட்டில் உள்ள அனைவரும் சகோதரர்கள் என்று கூறிக்கொள்கிறோம். கேரளாவில் முல்லைபெரியாற்றில் இருந்து மலையாளி தண்ணீர் தரமறுக்கிறான், காவிரியில் கன்னடன் தண்ணீர் தரமறுக்கிறான். பாலாற்றில் தெலுங்கன் தண்ணீர் தர மறுக்கிறான். இதுதான் இந்தியாவா?

ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை ஆளுகின்ற கட்சி இலங்கையில் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவது கண்டு ஆதங்கப்படவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ், திமுக அதிமுக கட்சிகள் தமிழகத்தில் தமிழ் இன உணர்வை மழுங்க வைத்து விட்டது . தமிழகத்தில் தமிழ் ஈழ விடுதலையை பெற்றுத்தர உண்மையில் விரும்பியவர் மறைந்த எம்ஜியார்தான். அவர்தான் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருக்குப்பின் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் அந்த உணர்வோடு செயல்பட்டிருந்தால் ஈழத்தில் ஒரு தமிழன் கூட செத்திருக்க மாட்டான். மாவீரன் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக போராட்டமாக வெடிக்கும் என்றார்.

Read more...

இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும், இன்னும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறுபான்மை சமூகங்களின் சார்பில் குறைந்தபட்ச கொள்கை திட்டம் ஒன்றினை முன்வைத்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று சேர்ந்து செயற்படுவது சம்பந்தமான ஒரு முடிவை எட்டலாம் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களால் வகுக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயற்திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவசர மீள்குடியேற்றம், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு சம்பந்தமான விடயங்கள் போன்றவை இடம்பெறும் என்றும் ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியும் அந்த குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் கூட்டணி சார்பில் யார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கை செல்ல பல மாதங்களாக அனுமதி கிடைக்கவில்லை - ஐ.நா பிரதிநிதி


ஐ.நா

இலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

இலங்கையில் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் நிலைமை குறித்து கண்டறியும் பொருட்டு விஜயமொன்றை மேற்கொள்ள தொடர்ந்து தான் முயற்சித்து வருதாக ப்ரான்க் லா ரூ தெரிவிக்கிறார்.

தமது வருகையை வரவேற்பதாக இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ள போதிலும் தமக்கான அதிகாரபூர்வ பதில் கடிதத்தை அவர்கள் அனுப்பி வைக்காதிருப்பது குறித்து ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் துவக்கம்


திங்கட்கிழமை முதல் செயற்பாடுகள் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள யோகபுரம் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை முதல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

ஞாயிற்றுக்கிழமை அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மதிப்பீடு செய்த கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதேவேளை துணுக்காய் பிரதேசத்தில் திங்கட்கிழமை முதல் அஞ்சல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா விஜயம்


திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லமா, இந்தியா சீனா எல்லையிலுள்ள அருணாச்சல பிரதேசத்திலிருக்கும் புத்த மடத்திற்கான விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த மடத்தை சுற்றியுள்ள இடங்கள் சீனாவுக்கு சொந்தமானது என்று உரிமை கோருகின்ற சீன அரசு தலாய் லாமாவின் இந்த விஜயத்தால் கொதிப்படைந்துள்ளது.

இமயமலைத் தொடரில் உயரமானதோர் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்குப்புறமான புத்த மடம், இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962ல் சிறிது காலம் நடந்த யுத்தத்தின் ஒரு காரணமாகவும் இந்த எல்லைத் தகராறு அமைந்திருந்தது.

சீனாவின் நில ஒருமைப்பாட்டை குலைப்பதற்கான ஒரு முயற்சி இது என்று சீன அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. தலாய் லாமாவின் இந்தப் பயணம் இந்தியா சீனா இடையிலான உறவுகள் சேதப்பட காரணமாக அமையும் என்று கூறுகிறது.

ஆனால் தனது ஆன்மிக விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக உரையாற்றுவதற்காகவே தான் இங்கு சென்றிருப்பதாக தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். தனது பயணத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்ற சீனாவின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடந்த தேர்தலுடைய பிரச்சார காலத்தில் இந்தியப் பிரதமர் அங்கே சென்றிருந்தபோதும் சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.



--------------------------------------------------------------------------------


ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா


டக் போல்லிங்கர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஞாயிற்றுகிழமை குவஹாத்தில் நடைபெற்ற ஆறாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதன் மூலம் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 4 – 2 என்ற நிலையில் முன்ணணியில் இருக்கிறது, தொடரையும் வென்றுள்ளது.

7வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நவம்பர் 11 ஆம் தேதி அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter